செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ !
கன்றை காக்க தாய்மடி கை தூக்கி வணங்கியதோ!!
செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ !
முத்து முத்தாய் சிரிப்பாளோ மூக்கை சுழற்றி முகநளினம் செய்வாளோ
காக்கை விரட்டிய கைகள் இதுவோ காலம் கடந்து நடக்கும் கால்கள் அதுவோ !
மூச்சிளைத்தாளோ முன்னால் தகப்பன் நின்றிருந்தானோ
காய்ச்சிய ஈயத்தை காதிலே ஊற்றும் கதறல்கேட்டு துடித்தானோ !
கன்றை காக்க தாய்மடி கை தூக்கி வணங்கியதோ
தன்னை முன்னே கொல்லென அது தயவாய் கேட்டதுவோ?
என்றோ இறந்துபோன என்னைவிட மூத்தவளே
இன்னும் குழந்தையாய் இருக்கும் இறவா வரம் பெற்றவளே !
மலமென்று நினைத்து உன்னை மண்ணுக்குள்ளே புதைத்தாலும்
மலைபோல் எழுந்தின்று மனு நீதி கேட்கின்றாயோ !
மிச்சம் மீதி வையாதேயென மேலிடத்தான் சொன்னதினால்
பச்சிளம் பாவையையும் கொன்றாயோ பாதகனே ! புத்தனை கொன்றொழித்து
போதிமரத்தை விறகாக்கி நீ மூட்டிய நெருப்பு இன்னும் எரியுது காண்பாய் !
உன்னையும் சுடுமந்த ஊழிக்காலத்தீயில் உண்மை புகைவதை பார் !
காலக்கடிகாரம் இன்று ஓலம் விட்டு கேட்கிறதே
எலும்பை மட்டும் எண்ணி வைத்தால் எழும்பாத நீதி எழும்பி வருமோ?
அ.நடேசன்


