பலதும் பத்தும். 21.11,2025 - தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு!
பாம்பு கடிக்கு இலக்காகிய உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவன்!
தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு!
மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமான மாவீரர் வாரம்!
தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.
எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்?
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் என்பவரே தனக்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக இராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தொடர்பில் தான் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், அது குறித்து முஹம்மட் பைசல் ஆத்திரமடைந்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட இடத்தில் CCTV கெமராக்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தி இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணையை நடத்துமாறும் பிரதி சபாநாயகரிடம் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
இந்தியா நோக்கி பயணமானார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.
அவர்கள் இன்று காலை 8.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-121 இல் இந்தியாவின் சென்னை நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
பாரிஸில் 112,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!
பிரான்ஸ் பாரிஸில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக பரவலான மின்வெட்டு ஏற்பட்டதால் 170,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்தன.
உள்ளூர் நேரப்படி காலை 6.38 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டதால் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் பாதைகள் நிறுத்தப்பட்டன.
நகரத்தில் 112,000 வீடுகள் ஐந்து நிமிடங்களுக்குள் மீண்டும் மின்சாரம் இணைக்கப்பட்டதாக பிரான்சின் உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றங்களை நிர்வகிக்கும் RTE எக்ஸ் தளத்தில் எழுதியது.
எனினும் பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வீடுகளும் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குள் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டன.
காலை 5.38 மணிக்கு நகரின் தென்மேற்கில் உள்ள இஸ்ஸி-லெஸ்-மவுலினாக்ஸில் உள்ள ஒரு மின் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மின்வெட்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் பாதுகாப்பு அதிகரிப்பு!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரசித்தி பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு இணையான சிறப்பினை பெற்ற இந்த அருங்காட்சியகத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்
இந்தநிலையில் கடந்த மாதம் வைர கிரீடம், நெக்ளஸ் உள்பட சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
இந்த சம்பவம் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
எனவே பாதுகாப்பை பலப்படுத்த அங்கு 100 கேமராக்களை பொருத்த முடிவு செய்திருப்பதாக லூவ்ரே அருங்காட்சியக இயக்குனர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ் தெரிவித்துள்ளார்.
பாம்பு கடிக்கு இலக்காகிய உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவன்!
யாழ். பருத்தித்துறை காட்லிக் கல்லூரிக்கு உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவன் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
பரீட்சை எழுத துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன், துவிச்சக்கர வண்டியை நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது அவ் இடத்தில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவனை உடனடியாக வடமராட்சி வலயக்கல்வி மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நோயாளி காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
தற்போது குறித்த மாணவன் காட்லிக் கல்லூரியில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் நோயாளி காவு வண்டி, வைத்தியர்கள் போன்றவர்களின் முழுமையான மருத்துவ கண்காணிப்புடனே குறித்த மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்கள் செலுத்தலாம்! திங்கள் முதல் நடைமுறை!
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொட்டாவையில் அமைந்துள்ள மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அட்டை கட்டண முறை நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இதன்படி, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து கட்டணங்களுக்கான வங்கி அட்டைகள் மூலமாக பயணிகள் செலுத்தலாம்.
அரசு, தனியார் உட்பட மொத்தம் 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் நிலநடுக்கம்
பங்களாதேஷில் இன்று(21) வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5.5 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கமானது தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கோரஷால் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படையின் போர் கப்பல்
இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 18 காலை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது.
வந்தடைந்த கப்பலை கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
தீவை வந்தடைந்துள்ள ‘INS SUKANYA’ என்ற போர் கப்பல் 101 மீட்டர் நீளம் கொண்டதுடன், இந்த போர் கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER, SANTOSH KUMAR VERMA கடமையாற்றுகின்றார்.
இந்தக் போர் கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கப்பலின் அங்கத்துவ குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
தீவின் பல முக்கிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளனர். மேலும், இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, 'INS SUKANYA' என்ற போர் கப்பலானது நாளை மறுதினம் (21)திகதி தீவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மலையக ரயில் பாதையில் மரங்கள்
மலையக ரயில் பாதையில் மரங்கள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை இன்னும் சீரமைக்கப்படவில்லை.
அதன்படி, இன்று (20) கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் நானுஓயாவிற்கும், பதுளையில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் திருப்பி விடப்படும்.
மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்ட இடம் ஆபத்தான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மலையக ரயில் பாதையில் ரயில் பராமரிப்பு பணிகள் இன்றிரவு (20)க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
பதுளையில் இருந்து கொழும்புக்கு இயக்கப்பட்ட இரவு அஞ்சல் ரயில் இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால், மண் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்துள்ளன.
போதைப்பொருள் சுற்றிவளைப்பு
போதைப்பொருள் சுற்றிவளைப்பு சிறப்பு நடவடிக்கையொன்றில், போதைப்பொருள் வைத்திருந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் கந்தேகெடிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த இராணுவ சிறப்பு படையின் ஒரு சிப்பாய் மற்றும் அவருடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரும் அடங்குவர்.
பலகொல்ல, கந்தேகெடிய, தலதென, மீகஹகிவுல, அக்கலவுல்பொத்த மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20-43 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரான இராணுவச் சிப்பாய் முதலில் பலகொல்ல பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்த ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே ஏனையவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் பணியிலிருந்து விடுமுறையில் வந்தபோது குறித்த சிப்பாய் மீகஹகிவுல கந்தெகெட்டிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களைத் தொடர்புகொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


