முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்!
தனதாட்சியின் முதன்மைக் குறையாக விளங்கும் 'பொது நிதிப் பற்றாக்குறையை' அரசுத்தலைவர் மேக்ரோன் மறைக்காமல் ஒப்புக்கொண்டார்.
பிரான்சின் அடுத்த அரசுத்தலைவர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தற்போதைய ஆட்சிப் பொறுப்பின் இறுதி ஓராண்டைக் குறித்து அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் நேற்று இரவு 'பிரான்ஸ் 2' தொலைக்காட்சியின் சிறப்பு நேர்காணலில் மனம் திறந்து பேசினார். எலிசி மாளிகையிலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விறுவிறுப்பான உரையாடலில், உலகளாவிய வெளியுறவுச் சிக்கல்கள் முதல் பிரான்சின் உள்நாட்டுப் பொருளாதாரப் சவால்கள் வரை அனைத்திற்கும் அவர் அதிரடியாகப் பதிலளித்தார்.
அண்மையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பூர்வாங்க அமைதி உடன்படிக்கையை அரசுத்தலைவர் மேக்ரோன் பெரிதும் வரவேற்றார். உலகப் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது பிரான்சிற்கு மிக முக்கியமான ஒன்று என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"இந்த அமைதி ஒப்பந்தம் வெறும் சர்வதேச விவகாரம் மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்புடனும் பிரான்சின் சொந்த நலன்களுடனும் நேரடியாகத் தொடர்புடையது." என்று இம்மானுவேல் மக்ரோன் குறிப்பிட்டார்.
இதன் எதிரொலியாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் , பிரான்சில் கடந்த சில வாரங்களாகக் கடுமையாக உயர்ந்து வந்த எரிபொருள் விலையானது வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும் என்ற சுபச்செய்தியைப் பொதுமக்களுக்குப் பகிர்ந்துகொண்டார்.
நாட்டின் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரத் தேக்கம் குறித்த கடினமான கேள்விகளை ஊடகவியலாளர் கரோலின் ரூக்ஸ் முன்வைத்தபோது, அரசுத்தலைவர் மக்ரோன் தமதாட்சிக் காலத்தின் சாதனைகளைத் தரவுகளுடன் தற்காத்துப் பேசினார்.
வல்லமைமிக்க ஆயுதப்படை: பிரான்ஸ் இன்று முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தெளிவான வெளியுறவு நயம்: சர்வதேச அரங்கில் பிரான்சின் தூதரகக் குரல் மிகவும் தெளிவானதாகவும் பலம் வாய்ந்ததாகவும் மாறியுள்ளது என்றார்.
பொருளாதார ஒப்பீடு: நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசுகையில், "கடந்த பத்தாண்டுகாலப் புள்ளிவிவரங்களை அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் ஜெர்மனி மற்றும் இத்தாலியை விட அதிகப் பொருளாதார வளர்ச்சியை ஈட்டியுள்ளோம்" என்று வாதிட்டார். தனதாட்சியின் முதன்மைக் குறையாக விளங்கும் 'பொது நிதிப் பற்றாக்குறையை' அரசுத்தலைவர் மேக்ரோன் மறைக்காமல் ஒப்புக்கொண்டார். நாட்டின் பொது நிதியைச் சீரமைக்க வேண்டுமாயின், நமது சமூகப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை, குறிப்பாக ஓய்வூதியம் மற்றும் மருத்துவத் துறைகளைத் தொடர்ந்து சீரமைக்க வேண்டியது இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தினார்.
வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ஒரு சமூகத்தில், ஓய்வூதியச் சீர்திருத்தப் பணிகளை மீண்டும் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்ட அவர், இச்சீர்திருத்த விவகாரத்தில் தமக்கு முழுமையான அரசியல் ஆதரவு கிடைக்காமல் போனதை வருத்தத்துடன் பதிவு செய்தார். மேலும், "இப்பணிகளை முழுமைப்படுத்துவது எனக்குப் பின்னால் வரவிருக்கும் புதிய ஆட்சியாளர்களின் மிக முக்கியக் கடமையாக அமையும்" என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
- சிவா சின்னப்பொடி


