நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை; அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை - சஜித்
கொவிட் புதிய திரிவு தோன்றியுள்ளது; பரிசோதனைகளை விரைவுபடுத்துங்கள்

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இவ்வாறான பின்புலத்தில், இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவும் இல்லை, பதில்கள் வழங்கப்படவுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று (22) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகள் இவை. இன்றும் கூட, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பேசி வருகிறது. ஆனால் மருந்துப் பற்றாக்குறை தொடர்பிலோ அல்லது சுகாதாரத் துறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கோ எந்தப் பதிலும் இல்லை.
நாட்டு மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு எந்த ஆர்வமும் இல்லை. இலவச சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கும் இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாக இல்லை.
கொவிட் புதிய திரிவு தோன்றியுள்ளது; பரிசோதனைகளை விரைவுபடுத்துங்கள்
LP 8.1 எனப்படும் கொவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பரவி வருகின்றன. இந்த துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்த வித பரிசோதனைகளும் நடைபெறுவதாக காண முடியவில்லை.
இந்த கொவிட் துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் இந்த அறிகுறிகளைக் காண்பிப்பவர்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சின்னம்மையும் பரவி வருகிறது
சின்னம்மை பரவுவதாலும் கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 6 வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோய் பரவுவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, இதற்கும் தெளிவான திட்டமொன்று முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.