வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்- உணவு வியாபார நிலையங்களுக்கு விடுக்கப்ட்ட அறிவுறுத்தல்!
ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றினை வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றையதினம் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆலயத்தில் அதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றினை வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றையதினம் விடுத்துள்ளனர்.
உணவகம் (ஹோட்டல்), சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும் நிலையங்கள் குறிப்பாக ஜஸ்கிறீம் கடை, ஜஸ்கிறீம் வாகனம், பூந்தி இனிப்பு வகைகள் மற்றும் மிக்சர் கடைகள் இவை அனைத்தும் தத்தமது பிரதேச உள்ளூராட்சி சபைகளின் அனுமதியினை பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜஸ்கிறீம், உணவகங்கள், தேநீர், பூந்தி இனிப்பு, மிக்சர் சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற ஐஸ்கிறீம் கடைகளில் மாத்திரமே ஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அத்துடன் அதற்கான பற்றுச் சீட்டினை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவகத்திற்கும், சர்பத் கடைகளுக்குமான உரிமையாளர்கள் ஜூன் 07ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர் உற்சவகால அலுவலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் கட்டாயம் பங்குபற்றுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.