இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; இருவர் காயம் - 13 மீனவர்கள் சிறைபிடிப்பு!
.
தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.
நேற்று (ஜனவரி 27) புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 360 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டை முன் வைத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 13 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகவும், அப்போது அவர்களை விரட்டிப் பிடிக்கும் போது, மீனவர் படகை நோக்கி லப்பர் குண்டால் சுட்டதாகவும், இதில் விசைப்படகு கண்ணாடி உடைந்து இரண்டு மீனவர்களுக்கு தோள்ப்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த இரு மீனவர்களும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.