"20 பேர் கொண்ட மருத்துவக்குழு சிகிச்சை" : ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவர் மீது தாக்குதல் - டீன் ரேவதி!
"17 வயதுடைய பள்ளி மாணவன் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் மோசமான நிலை,

ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாளால் தாக்கப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவனுக்கு 12 இடங்களில் வெட்டுக் காயம் விழுந்துள்ளதாகவும், 20 பேர் கொண்ட மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாளால் தாக்கப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவனுக்கு 12 இடங்களில் வெட்டுக் காயம் விழுந்துள்ளதாகவும், 20 பேர் கொண்ட மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவர், நேற்று (மார்ச் 10) திங்கட்கிழமை காலை பொதுத்தேர்வு எழுதப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஓடும் பேருந்தை வழிமறித்த சில அடையாளம் தெரியாத நபர்கள், மாணவரைக் கீழே இறக்கி அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று இளைஞர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு, தீவிர அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. இந்த நிலையில், மாணவனின் நிலை குறித்து மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.
மாணவனின் தற்போதைய நிலை?:
செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், "17 வயதுடைய பள்ளி மாணவன் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் மோசமான நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. தலை பகுதியில் ஆறு இடத்தில் வெட்டுக் காயங்கள் கண்டறியப்பட்டது. ஆகையால், மாணவனை உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் குழு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, அதிநவீன சிகிச்சை கொடுத்து, முதலில் நிலையான தன்மைக்குக் கொண்டு வந்துள்ளது. இடது கையில் அனைத்து விரல்களும் துண்டாகி, கையே சிதைந்து இருந்ததும், வலது கையில் பெருவிரல் துண்டாகி இருந்ததும் சிகிச்சையில் கண்டறியப்பட்டது.
மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. அதனால், ஆக்சிஜன் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. முதுகு பகுதியிலும் அதிகமான வெட்டுக் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து விதமான காயங்களுக்கும் அதிநவீன சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தமாக, அவருக்கு 12 இடங்களில் வெட்டு விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பிளாஸ்டிக் சர்ஜன் உள்ளிட்ட ஏழு பிரிவுகளைச் சேர்ந்த 20 பேர் கொண்ட மருத்துவக்குழு தற்போது மாணவனுக்கு அறுவை சிகிச்சையை நடத்தி வருகிறது.
24 மணி நேரமும் கண்காணிப்பு:
தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்த நிலையில் மண்டை ஓட்டில் ஓட்டை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாணவன் பேசும் நிலையில் இருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் உறுதியான நிலை குறித்த தகவல் வெளியிடப்படும். தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால், சிறுவனுக்கு ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து ஆக்சிஜன் சுவாசம் கொடுக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றோம்," என அவர் தெரிவித்தார்.