யுத்தத்தின் இறுதிப்பகுதியில் போர்க்குற்றங்களை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்தோர். பயத்திலேயே அதை செய்திருக்க மாட்டார்கள்.

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட காலக்கட்டத்திலேயே அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடந்த பல குற்றச் செயல்களை தடுத்திருக்கலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எமது நாட்டில் இடம்பெற்ற பாரதூரமான கொலைகள் தொடர்பான குற்றங்கள், நீதித்துறைக்கு விரோதமான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவை போன்ற பல விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கை 35 ஆண்டுகளுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் இப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல அறிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய யுத்த காலத்தின் போதும் மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சி காலத்தின் போதும், நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான யுத்தக் குற்றங்கள் போன்ற பல விடயங்களை கொண்ட பல்வேறு அறிக்கைகள், பட்டலந்த அறிக்கையை போன்று பல வருடங்களாக ஆராயப்படாமல் களஞ்சியங்களில் இருக்கின்றன.
இவ்வாறான அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதனை அப்படியே கைவிட்ட வரலாறுகள் உள்ளன. அதனால் இந்த அறிக்கையை விவாதிப்பது மட்டுமன்றி அறிக்கையில் குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான முறையான விசாரணைகளை நடத்த வேண்டும்.
அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் பொறுப்புக் கூறுபவர்களாக இருக்க வேண்டும். இந்த பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதன் ஊடாக இவ்வாறான குற்றங்கள் மீள ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிப்பகுதியில் இதேபோன்று மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், நீதிக்கு புறம்பான கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பாமை,போர்க் குற்றங்கள் போன்றவை பல அறிக்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறிக்கைகளை எடுத்து நடவடிக்கை எடுக்கும் போது நாட்டுக்காக போராடியவர்களை காட்டிக்கொடுப்பதாக இங்குள்ள அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
எத்தனை அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருகின்றோம் என்பதில் பிரச்சினையில்லை. ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாக இருந்திருந்தால், யுத்தத்தின் இறுதிப்பகுதியில் போர்க்குற்றங்களை செய்தவர்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்தோர். பயத்திலேயே அதை செய்திருக்க மாட்டார்கள்.
எவ்வாறாயினும் அறிக்கைகளில் உள்ள முடிவுரைகளுக்கமைய சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதன் ஊடாக நாட்டில் இவ்வாறான குற்றங்கள் மீள நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது.
நாங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டும் இந்த அறிக்கைகளை புரட்டாமல், இந்த நாடு ஒரு அமைதியான எல்லா மக்களும் வாழக் கூடிய நாடாக மாற வேண்டுமாக இருந்தால் இந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.