நோர்வேஜிய மொழிவிருது பெற்றார் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜொகான் சண்முகரத்தினம்!
‘வாசகர்களை ஈர்க்கின்ற செழுமையான ஊடகமொழி கைவரப்பெற்றவர்

நோர்வேஜிய மொழிவிருது பெற்றார் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜொகான் சண்முகரத்தினம்!
‘வாசகர்களை ஈர்க்கின்ற செழுமையான ஊடகமொழி கைவரப்பெற்றவர் ஜொகான். நகைச்சுவை, அறிவார்ந்த பார்வை, மற்றும் நேர்த்தியான ஊடகமொழி மூலம் வியத்தகு ஆற்றலுடன் வாசகர்களை ஈர்க்கின்றார். அவர் தனது எழுத்துகளிற் கையாளும் பேசுபொருட்களின் பரப்புப் பெரியது, ஆனால் எப்போதும் காலப்பொருத்தமுடையவை. இந்த வெற்றியாளர் நோர்வேஜிய பத்திரிகைப் பரப்பினை விரிவுபடுத்தத் துணைநிற்கின்றார். அந்தப் பரப்பினை நகைச்சுவை, அறிவு, புதிய நுண்ணறிதல், திடமான ஊடக மொழி ஆகியவற்றால் நிரப்புகிறார்’ என வர்ணித்துள்ளது விருதுத் தெரிவிற் பணியாற்றிய நடுவர் குழு.
ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜொகான் சண்முகரத்தினம் அவர்களுக்கு நோர்வேயின் முதன்மைச் செய்தி நிறுவனமான NTBஇன் (Norsk Telegrambyrå/The Norwegian News Agency) 2023ஆம் ஆண்டுக்கான ‘மொழி விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டிலிருந்து NTB இந்த மொழி விருதினை ஒவ்வோராண்டும் வழங்கி வருகின்றது. நோர்வேஜிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஒருவர் முதன்முறையாக இவ்விருதிற்குத் தெரிவாகியுள்ளமை தனித்துவமான அம்சமாகுகின்றது. நோர்வேயின் பர்கன் (Bergen) நகரில் இடம்பெற்ற ‘நோர்டிக் ஊடக நாட்கள் - The Nordic Media Days’ நிகழ்வின் போது (மே 2ஆம் திகதி) விருது வழங்கப்பட்டுள்ளது.
‘வாசகர்களை ஈர்க்கின்ற செழுமையான ஊடகமொழி கைவரப்பெற்றவர் ஜொகான்’ என வர்ணித்துள்ளது விருதுத் தெரிவிற் பணியாற்றிய நடுவர் குழு.
நோர்வேஜிய ஊடக-இலக்கியப் பரப்பில் ஜொகானுக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது விருது இதுவாகும். கடந்த 2022இல் இவருடையஇரண்டாவது புத்தகத்திற்கு (Bruddet) நோர்வேயின் புத்தக வணிகக் கூட்டமைப்பின் ((Norwegian Bookstore assosiation) விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் நோர்வேயின் ஊடக எழுத்தாளர்களில் ஒருவரைத் தனியான நடுவர் குழு மூலம் தேர்வு செய்து மொழிவிருதினை NTB வழங்கிவருகின்றது. குறித்த ஆண்டு முழுவதும் சிறந்த எழுத்துவடிவ செய்திமொழியில் ஆளுமையை வெளிப்படுத்தும் ஊடகத்துறை ஆளுமைக்கான விருது இதுவாகும்.
ஜொகான் 1985இல் தனது 6வது வயதில் பெற்றோர் மற்றும் இவரிலும் 4 வயது மூத்தவரான சகோதரருடன் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர். இவரது தந்தை ஈழத்தமிழர். அவர் நம்மத்தியில் வாழும் சிந்தனையாளரும் விமர்சகருமான பேராசிரியர் ந.சண்முகரத்தினம் ஆவர். தாயார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் (Mikuko Kitayama). ஜொகான் ஈழத்தில் பிறந்து தனது மூன்று வயதுவரை அங்கு வாழ்ந்து – பின்னர் தனது தாயாரின் தாயகமான ஜப்பானில் ஆறு வயது வரை வாழ்ந்தவர். 1985இல் குடும்பத்துடன் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.
ஜொகான் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் சமூகப் புவியியல் துறையில் பயின்றவர். 2003ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை நோர்வேயின் ‘கிளஸ்சக்கம்பன்’ (Klassekampen/Class Struggle) நாளிதழில் ஊடகவியலாளராப் பணியாற்றி வருகின்றார். 2011 – 2017 காலப்பகுதியில் அவ்விதழின் சர்வதேசச் செய்திகள், கட்டுரைகளுக்கான பிரிவின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.
நாளாந்தம் பத்திரிகைக் கட்டுரைகளுக்கு அப்பால் நோர்வேஜிய மொழியில் இதுவரை மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். ‘Vi puster fortsatt’ (நாம் இன்னும் சுவாசிக்கின்றோம்), ‘Bruddet – Byen som ville ha brexit’ (உடைவு- வெளியேற்றத்தை விரும்பிய நகரம்), ‘Hjertet i to: Seks måneder med Karpe’ (இதயம் இரண்டாக: கார்பேயுடன் ஆறு மாதங்கள்) ஆகியன அவர் எழுதிய நூல்களாகும். இவருடைய நூல்கள் இனவாதம், அடையாளம், இணைவாக்கம், அந்நியப்படுத்தல் ஆகிய பேசுபொருட்களை உள்ளடக்கிய கதையாடல்கள். மூன்று நூல்களும் நோர்வேஜிய ஊடக, இலக்கிய, வாசகர் மட்டங்களிற் பரவலாக அறியப்பட்டவை.
(ஜொகானின் எழுத்துப் பணி, புத்தகங்கள், விருதுத் தெரிவின் நடுவர் குழு அறிக்கையின் உள்ளடக்கம் ஆகியவற்றை முன்வைத்து நான் எழுதிய விரிவான கட்டுரை இதழ் ஒன்றில் வெளிவரும் )