"எனக்கு உடனே பாதுகாப்பு தாங்க".. கமிஷனரிடம் நேராக சென்ற நடிகை கெளதமி.. என்னாச்சு?
பாஜகவில் தீவிரமாக செயல்பட்ட கெளதமி, பின்னர் அதிருப்தி காரணமாக அதிமுகவில் இணைந்தார்.

வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு சிலர் என்னை தொடர்ச்சியாக மிரட்டி வருகின்றனர். எனவே, எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நடிகை கௌதமி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நாடியுள்ளார்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல் வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் நடிகையும் மற்றும் அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளருமான கௌதமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் கௌதமி. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஒருகாலத்தில் பாஜகவில் தீவிரமாக செயல்பட்ட கெளதமி, பின்னர் அதிருப்தி காரணமாக அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, அவருக்கு அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதனிடையே, தனக்கு சொந்தமாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிலத்தை தனது உதவியாளராக இருந்த அழகப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரிக்க முயல்வதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு கெளதமி புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அழகப்பனையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று (மே 14) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகை கௌதமி நேரடியாக வந்து மனு ஒன்றை அளித்தார். அதில், “சென்னை நீலாங்கரை பகுதியில் எனக்கு சொந்தமாக 9 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் இருக்கிறது. அதனை சிலர் அபகரிக்க முயல்கின்றனர்.
சிலர் சட்டவிரோதமாக மாநகராட்சியில் அனுமதி பெற்று, மின்சார இணைப்பும் பெற்று அந்த நிலத்தில் கட்டுமான பணி தொடங்கி இருந்தனர். இத தொடர்பாக நான் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும், நீலாங்கரை காவல் நிலையத்திலும் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த நிலத்தில் கட்டுமான பணிகளை நிறுத்தி, அந்த இடத்தை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே, அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள சில ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து தருவதற்கு சிலர் தன்னை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு 96 ஆயிரம் ரூபாய் பணம் கேட்கின்றனர். மேலும் சிலர், வழக்கறிஞர்கள் போர்வையில் தனது வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக மிரட்டி வருகின்றனர்.
எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை கொடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கெளதமி குறிப்பிட்டுள்ளார்.