யுக்ரேனுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் புதின் – ஸெலன்ஸ்கியின் பதில் என்ன?
பேச்சுவார்த்தைகளை தொடர நாங்கள் யுக்ரேனிடம் கூறுகிறோம்… நேரடி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும், எவ்வித நிபந்தனையும் இன்றி இதை நான் வலியுறுத்துகிறேன்,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் மே 15ம் தேதி “நேரடி பேச்சுவார்த்தைகளில்” பங்கேற்குமாறு யுக்ரேனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்யாவை ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ள சில மணிநேரங்களில், புதின் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ரஷ்யா 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் மாளிகையிலிருந்து அரிதாக இரவு நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட உரையில், “நீண்ட கால, வலுவான அமைதியை நோக்கிய” “தீவிரமான பேச்சுவாரத்தைகளை” ரஷ்யா எதிர்பார்ப்பதாக புதின் கூறினார்.
சனிக்கிழமை அன்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தன் நட்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் யுக்ரேன் தலைநகர் கீவ் சென்று, வரும் திங்கட்கிழமை முதல் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்தார்.
ரஷ்யா கூறியது என்ன?
“இதுகுறித்து தாங்கள் யோசிப்பதாக” கூறிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “ஆனால் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது வீண்” என கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை, ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையே “ஒரு புதிய (போர் நிறுத்த) ஒப்பந்தத்தை” ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறை “புறந்தள்ளிவிட முடியாது” என புதின் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகள், முன்பு நிகழ்ந்தது போல துருக்கி நகரமான இஸ்தான்புல்லில் நடைபெற வேண்டும் என அவர் கூறினார்.
இதுதொடர்பான விவரங்களை ஆலோசிக்க துருக்கி அதிபர் ரிசப் தையிப் எர்டோகனிடம் ஞாயிற்றுக்கிழமைதான் பேச உள்ளதாக புதின் தெரிவித்தார்.
புதினை எச்சரித்த ஐரோப்பிய தலைவர்கள்
சனிக்கிழமை பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் மக்ரோங், ஜெர்மனியின் சான்சிலர் ஃபிரெய்டரிக் மெர்ஸ் மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் யுக்ரேன் தலைநகர் கீவ்-க்கு சென்றனர். யுக்ரேனை ஆதரிக்கும் நாடுகள் அடங்கிய குழுவில் (coalition of the willing) இந்நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் இந்நாடுகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, “வான்வழி, கடல் மற்றும் தரை வழியிலான” 30 நாள் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் வங்கி துறைகள் மீது “புதிய மற்றும் பெரியளவிலான” தடைகள் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு தலைவர்கள் எச்சரித்தனர்.
டொனால்ட் டிரம்ப் உடனும் இந்த முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் பின்னர் பிபிசியிடம் கூறுகையில், தங்களின் உடனடி போர் நிறுத்த பரிந்துரை “நிச்சயம் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று” என்பதில் டிரம்ப் “முற்றிலும் தெளிவாக உள்ளதாக” தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு யுக்ரேனுடன் “துணை நிற்பதற்காக” தலைவர்களுக்கு ஸெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
‘அமைதிக்கான முதல் படி’
இந்த முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ், “எங்கள் மீது அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது வீணானது,” என்றார்.
ஐரோப்பாவின் கருத்துகள் பெரும்பாலும், “பொதுவாக உறவுகளை புதுப்பிப்பதை விட மோதல் போக்குடனேயே இருக்கும்,” என்றும் பெஸ்கோவ் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் குறித்து யோசிப்பதற்கு முன்பு, மேற்கு நாடுகள் முதலில் யுக்ரேனுக்கு ராணுவ உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என, முன்னதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி
கடந்த மாதம் ஈஸ்டரை ஒட்டி போர் நிறுத்தம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவது உட்பட பல்வேறு போர் நிறுத்த முன்மொழிவுகள் குறித்து பதிலளிக்க யுக்ரேன் தொடர்ந்து தோல்வியடைந்ததாக புதின் குற்றம் சட்டினார்.
இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவுக்காக தான் அறிவித்த 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தையும் புதின் குறிப்பிட்டார். இது, சனிக்கிழமை நள்ளிரவு உள்ளூர் நேரப்படி இரவு 09:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
‘ஒருதலைபட்சமான’, மூன்று நாள் சண்டை நிறுத்தத்தை மறுத்த யுக்ரேன், அதுவொரு “நாடகம்” என குறிப்பிட்டது. அதற்கு மாறாக, குறைந்தது 30 நாட்களுக்கு நீடிக்கும் போர் நிறுத்தத்தை ஸெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
ரஷ்யா கூறும் சண்டை நிறுத்தம் அமலான வியாழக்கிழமை அன்றே, 730 மீறல்கள் நிகழ்ந்ததாக ரஷ்யா மீது குற்றம் சாட்டிய யுக்ரேன், அதற்கு “தகுந்த முறையில்” எதிர்வினையாற்றியதாக தெரிவித்தது.
யுக்ரேன் 488 சண்டை நிறுத்த மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தங்கள் தரப்பில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்தது.
“எல்லாவற்றையும் தாண்டி, பேச்சுவார்த்தைகளை தொடர நாங்கள் யுக்ரேனிடம் கூறுகிறோம்… நேரடி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும், எவ்வித நிபந்தனையும் இன்றி இதை நான் வலியுறுத்துகிறேன்,” என சனிக்கிழமை புதின் தெரிவித்தார்.
யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா தொடங்கிய கடந்த 2022ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.