என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை... இதுதான் நாகரிகமா? வைரமுத்து காட்டம்!
விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், சண்டக்கோழி, தங்கமகன் என எனது பல்லவிகளை ஒரு வார்த்தை கூட கேட்காமல் படதலைப்பாக வைப்பது நாகரிகமாகுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் திரையுலகில் தன்னிடம் கேட்காமல் பலர் தன்னுடைய பல்லவிகளை எடுத்து அவர்களது படத் தலைப்புகளாக பயன்படுத்தி வருவதாக கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம், படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை, என்பதோடு மரியாதைக்கு கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.
ஒன்றா? இரண்டா! பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல.
என்னிடம் சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை. காணும் இடங்களில் கேட்டதுமில்லை. ’செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே’ என்று அகமகிழ்வேன். ஏன்? என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால், என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களுக்கு இசைஞானி இளையராஜாவின் மியூசிக் மாஸ்டர் நிறுவனம் இசை வெளியீட்டு உரிமையை வைத்துள்ள நிலையில், அந்த பாடல்களை அனுமதியின்றி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.