சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்களில் புலிகளின் ஆயுதங்களா ?
கொள்கலன்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், சமூகத்தில் கூறப்படுவதைப் போன்று பாரதூரமான பொருட்கள் எவையும் இல்லை

பல்வேறு சர்ச்சைகளை தோற்றிவித்துள்ள 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம் தற்போது மற்றுமொரு பூதாகரத்தை கிளப்பியுள்ளது. அதாவது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் அறிவிப்பின் பிரகாரம் குறித்த கொள்கலன்களில் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பி மறுப்பை தெரிவித்தாலும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட அரசாங்கம் காலம் கடத்தியது.
சிவப்பு அறிவித்தல் கொள்கலன்கள்
துறைமுகத்திலிருந்து எவ்வித பரிசோதனைகளும் இன்றி சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சர்ச்சை தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் மௌனமே, அனைவரது அவதானத்தையும் ஈர்த்துள்ளது. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பில் புதிய கருத்தொன்றை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாகவும், அவை தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்த கொள்கலன்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், சமூகத்தில் கூறப்படுவதைப் போன்று பாரதூரமான பொருட்கள் எவையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரணிலுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பில் முறைப்பாடளித்திருந்த தொழிற்சங்கத்தையும் அரசாங்கம் தன்வசப்படுத்தியுள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீர்மானித்தள்ளது.
இது இவ்வாறிருக்க மறுபுறம், ‘அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறைக்கு சென்றிருக்க மாட்டார்கள்.’ என்று மொரட்டுவையில் கடந்த வாரம் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினர் மத்தியிலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அவரது இந்த கருத்தானது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய தாக்குதலாகும் என்றும் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
புலிகளின் ஆயுதங்கள்
கொழும்பு துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள இந்த விடயம் முற்றிலும் ஆதாரமற்றதாகும். அத்தகைய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதரமும் இல்லை.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை இவ்வாறு அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது. துறைமுகத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 323 கொள்கலன்கள் எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா மறுப்பளித்திருந்தார்.
ஆனால் குறித்த கொள்கலன்கள் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டவை என்றும், அவற்றில் அபாயகரமான பொருட்கள் காணப்பட்டதாகவும் பல தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் இது தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
தயாசிறி ஜயசேகர கடந்த புதன்கிழமை இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளித்திருந்தார். இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவ்வாறானதொரு விடயத்தை வெளியிட்டுள்ளர்.
ஜனாதிபதி பதில்
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த இந்த கருத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட வில்லை மாறாக ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு சிறு விளக்கத்தை மாத்திரமே குறிப்பிட்டிருந்தது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சில் கேட்ட போது, உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதுவரையில் தீர்மானிக்க வில்லை என்ற குறிப்பிட்டனர்.
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானவுடன், சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்ததை அவதானிக்க முடிந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஆறு மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்குமான திறன் கூட்டு எதிர்க்கட்சியின் திறமையால் கூட்டணி அடைந்த சாதனையாகும் என அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த ஒன்றிணைந்த கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மூலகர்த்தா ஆவார்.
இக்கூட்டணி பலம் பெற அதன் பின் இருந்து உழைத்தவரும் அவர்தான். முதன் முதலாக ஐக்கிய தேசியக் கட்சி இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஆரம்பித்தது.
அதன் பின்னர் படிப்படியாக ஏனைய அனைத்துக் கட்சிகளும் ஐ.தே.க.வைச் சுற்றி திரண்டன. இதன் ஆரம்பத்துக்கான நடவடிக்கைகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பிலுள்ள தனிப்பட்ட அலுவலகத்திலும் இடம்பெற்றது.
ரணில் இதற்காக ஒரு புதிய அணியை முன்னிறுத்தி, அதனை வழிநடத்தினார். அவரால் முன்னிறுத்தப்பட்ட அந்த அணியிலிருந்தோர் தமக்கு ஒதுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாகச் செய்தனர்.
தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து பல புதிய குரல்கள் பலம் மிக்கவையாக முன்னிலை வகிக்கின்றன. நாமல் ராஜபக்ஷ, சாமர சம்பத், டி.வி.சானக மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர் என்பதே அரசியல் விமர்சனகர்களின் ஒருமித்த கருத்தாகவுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சியிலிருந்து இந்த வலுவான குரல்கள் தோன்றியதன் ஊடாக, பாரம்பரிய எதிர்க்கட்சித் தலைவராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாசவின் பதவிக்கான வகிபாகம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளமை சகலருக்கும் தெளிவாகத் தெரிகிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகித்த, ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களிடம் கட்சியின் எதிர்காலப் பணிகளை வழிநடத்தும் பணிகளையும் ஒப்படைக்கவும் ரணில் தீர்மானித்துள்ளார். இந்த புதிய குழுவானது ஐ.தே.க.வின் எதிர்காலத்துக்கான திட்டமிடல்களை தயாரிக்கும் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளது. இந்தக் குழு ஒரு அணியாக செயல்படும்.
ரணிலுக்கு எதிராக சதியா?
இந்தப் புதிய குழுவின் செயற்பாடுகள் குறித்து கட்சியின் பல மூத்த தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
எந்த பணிகளை முன்னெடுத்தாலும், இதுபோன்ற சில பழமைவாதிகள் கட்சி நவீனமாக மாறுவதை விரும்பவில்லை என்று ரணிலுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த நவீனமயமாக்கலுக்கு எதிராக அவர்கள் பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் சிலர் கட்சியில் தமக்கான இடத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்தினாலேயே இவ்வாறு புதியவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
அடுத்த வாரம் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் இந்த சிக்கல் தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘நாய்களை குளிப்பாட்டுவதற்கு அழைத்துச் செல்வதைப் போன்று விரும்பமில்லாமல் தான் சஜித் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கின்றார்’ என பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறினர். ஆரம்பத்தில் இந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி இருக்க முயன்ற சஜித் பிரேமதாசவுக்கு, பின்னர் வேறு எதுவும் செய்வதற்கு வழியின்றி பேச்சுவார்த்தைகள் பங்கேற்க வேண்டியேற்பட்டது.
ஆனால் ரணில் அந்தப் பேச்சுவார்த்தைகள் எதிலும் பங்கேற்காமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
எனினும் அவரது அனுமதியுடனும் வழிகாட்டலுடனும் அவரால் நியமிக்கப்பட்ட குழு அந்த பேச்சுவார்த்தைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றன.
இவற்றுக்கு மத்தியில் கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போது எழுந்த பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேசித் தீர்ப்பதற்கு ரணில் நடவடிக்கை எடுத்திருந்தார்.