பாலியல் வன்கொடுமை வழக்கு:அண்ணா பல்கலை., ஞானசேகரன் மீது மேலும் ஒரு புகார்!
செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருட்டு, ஆள்கடத்தல் உள்ளிட்ட 20 வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, திருட்டு, ஆள்கடத்தல் உள்ளிட்ட 20 வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அனைத்து வழக்குகளிலும் ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும், இவருக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தி மடிக்கணினி, செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரிடம் அத்துமீறி செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஞானசேகரன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஞானசேகரனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி அதிகாரிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானசேகரனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், அவரை சிபிசிஐடி அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்துள்ளனர்.
வேறு ஏதேனும் குற்றச்செயல்களிலும், வழிப்பறியிலும் ஞானசேகரன் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய நபர், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.