அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர்- சாகர காரியவசம்!
இராணுவத்தக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர், ஆளுங்கட்சியினர் வாய் திறக்கவில்லை.

அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் இல்லை என- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது செம்மணி விவகாரம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
போர் காலத்தில் நீலம் திருச்செல்வம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
கொழும்பில் கொலைசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களுள் பெரும்பாலானவர்களை புலிகளே கொன்றனர். துரையப்பாவை கொன்றதும் புலிகள்தான்.
யாழில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை அனுமதிக்காத – சமாதானத்தை கோரிய மக்களை கொன்றதும் அவர்கள்தான்.
அரசியல் இலாபத்துக்காக அதை (செம்மணியை) பயன்படுத்தக்கூடும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாடாளுமன்றம் வருகைதந்திருந்தார். இதன்போது இராணுவத்தக்கு எதிராக கூட்டமைப்பினர் மற்றும் அர்ச்சுனா குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் நாமல் அதனை மறுத்தார். ஆளுங்கட்சியினர் வாய் திறக்கவில்லை. இது தவறாகும் – என சாகர காரியவசம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.