அரசின் படுகொலைகளை அரசே விசாரிப்பது ஏற்புடையதல்ல! - தமிழரசுக்கட்சி.
மாற்றான் தாய் மனநிலையுடன் தமிழர்களை கையாள்கிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்துரைத்த சிறிதரன், இலங்கை இராணுவத்தினரை சர்வதேச அரங்கில் நிறுத்தமாட்டோம் எனவும், உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்கிறார் என விசனம் வெளியிட்டார்.
அதேவேளை நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், சர்வதேசத்தின் மத்தியில் நாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் விஜித்த ஹேரத் அவ்வாறு பேசுவதாகக் குறிப்பிட்ட சிறிதரன், இருப்பினும் மீறல்களாலும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்கள் அவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் உள்ளகப்பொறிமுறை ஊடாக எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரமுடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான் தமது தேவை என்னவென்பதைக் கூறவேண்டும் எனக் குறிப்பிட்ட சிறிதரன், இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமே விசாரணைகளை முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார்.