ஒரு நண்பனின் கதையிது…
இரு ஆளுமைகளுக்கும் இடையில் எந்தப்புள்ளியில் பகைமை உருவெடுத்தது என்பதை துல்லியமாக கணிக்க முடியாவில்லை!

உலகை பிணைத்து வைத்திருக்கக்கூடிய சீமெந்து என்றால், அது நட்பு மாத்திரமே என்றார், வூட்ரோவ் வின்சன்ட்.
அமெரிக்காவை ஆட்சி செய்த ஜனாதிபதிகளில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர். சிறந்ததொரு உலகைக் கட்டியெழுப்ப நல்ல நட்பு எத்தனை முக்கியமானது என்பதை வூட்ரோவ் வின்சன்ட் எடுத்துரைக்க முனைந்திருக்கலாம்.
அவரது கருத்தை இப்போது ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்? ஒரு நட்பின் கதையைப் பற்றி விபரிக்கத் தான்.
அமெரிக்காவை மீண்டும் மகோன்னதமாக மாற்றப் போவதாக கூறிக் கொண்டு கைகோர்த்த நண்பர்கள். இன்று பகைவர்களாக மாறி, குழாயடிச் சண்டை போல ஒருவரை திட்டிக் கொண்டு இருக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்த கதை அது.
நண்பர்களில் ஒருவர், அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதி. சர்ச்சைக்குரிய கொள்கைகளுக்கும், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக புரியும் அடாவடித்தனங்களுக்கும் பேர் போன செல்வந்தர். அரசியல் பாரம்பரியங்களை அப்பட்டமாக மீறி, இராஜதந்திர பாரம்பரியங்களுக்கு முரணாக செயற்படும் அரசியல்வாதி.
மறுபுறத்தில், இலோன் மஸ்க். தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானாகத் திகழும் கோடீஸ்வர வர்த்தகர். டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற நிறுவனங்களின் ஸ்தாபகத் தலைவர்.
மின்சாரத்தில் இயங்கும் கார்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற இவர் அறிமுகம் செய்த முன்னேற்றங்கள் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவை. விண்வெளி ஆராய்ச்சியிலும் இலோன் மஸ்க்கின் பங்கு அளப்பரியது. இதன் காரணமாக, உலகில் ஆகக்கூடுதலாக செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆளுமையாக மஸ்க் திகழ்கிறார்.
உலகில் ஆகக்கூடுதலான அதிகாரம் படைத்த மனிதரும், எதிர்காலத்தில் உலகை தலைகீழாக புரட்டிப் போடும் ஆற்றல் மிக்க மனிதரும் தோளோடு தோள் சேர்த்தார்கள் என்றால், அதன்மூலம் அரசியல், தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகிய துறைகளில் எத்தகைய சாதனைகளைப் புரிந்திருக்க முடியும்?
இவர்கள் நட்பு பூண்டதற்கு காரணங்கள் இருந்தன. ‘உன்னால் நானும், என்னால் நீயும் நன்மை பெற வேண்டும்’ என்ற எண்ணத்தை பிரதான காரணம் எனலாம்.
அமெரிக்காவில் புதுமைகளை புகுத்தக்கூடிய ஆளுமையாக இலோன் மஸ்க்கை டொனல்ட் ட்ரம்ப் பார்த்தார்.
குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மஸ்க் கொண்டுள்ள செல்வாக்கை கண்டு அவர் வியந்தார்.
மறுபுறத்தில், தமது வர்த்தகத்திற்கு சாதகமானமொரு பின்புலத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் தலைவராக டொனல்ட் ட்ரம்ப்பை இலோன் மஸ்க் பார்த்திருக்கக்கூடும்.
குறிப்பாக, தமது கம்பனிகளை இலாபமீட்டச் செய்வதற்கு முட்டுக்கட்டையாக அமைந்திருக்கும் கட்டுக்கோப்புக்களை உடைத்து விடும் போக்கைக் கொண்ட அரசியல் தலைவராக அமெரிக்க ஜனாதிபதியை இலோன் மஸ்க் என்ற கோடீஸ்வர வர்த்தகர் கருதியிருக்கவும் கூடும்.
தமது வர்த்தகத்தை கொழிக்கச் செய்யும் தந்திரமான நகர்வாக ட்ரம்பின் ஆட்சி நிர்வாகத்துடன் இலோன் மஸ்க் கை கோர்த்திருக்கலாம்.
இருவருக்கும் பொதுவான இலக்குகள் இருந்தன. தொழில்நுட்பத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் ஆகக்கூடுதலான ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடாக அமெரிக்காவை மாற்ற வேண்டுமென்ற குறிக்கோள்களையும் கூறலாம்.
அமெரிக்காவை பொருளாதார வல்லரசாக மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் துடித்தார். விண்வெளி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளை வணிகமயப்படுத்துவதற்காக மஸ்க் பாடுபட்டார்.
பாரம்பரிய மூலாதாரங்களைத் தாண்டிய மின்வலு உற்பத்தி, தானியங்கி கார்களின் தயாரிப்பு, விண்வெளிக்கான உல்லாசப் பயணங்கள் போன்ற துறைகளில் எதிர்காலத்தில் நல்ல இலாபம் கிடைக்குமென கருதி, இந்தத் துறைகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்க வேண்டும் என இருவரும் எதிர்ப்பார்த்தார்கள்.
ட்ரம்ப்பைப் பொறுத்தவரையில், மஸ்க்கின் புதிய கண்டுபிடிப்புகள் அமெரிக்காவின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் சின்னங்களாகத் தெரிந்தன. மஸ்க்கைப் பொறுத்தவரையில், வெள்ளை மாளிகையின் ஊடாக கிடைக்கும் அதிகாரங்கள், தமது வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளும் பொன்னான வாய்ப்புகளாக தென்பட்டன.
இருவரும் பகைவர்களானது எப்படி? பல விடயங்களில் இருவருக்கும் இடையில் விளைந்த கருத்து முரண்பாடுகளை காரணமாகக் கூறலாம்.
ஆரம்பத்தில் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகளை ட்ரம்ப் மஸ்க் ஆதரித்தார். ஆனால், சுவாத்திய மாற்றத்தின் விளைவுகளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய பாரிஸ் உடன்படிக்கை போன்ற விவகாரங்களில் ட்ரம்ப் அனுசரித்த நிலைப்பாடுகள் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தின.
டெஸ்லாவின் மூலம் கார்களை தயாரித்த மஸ்க், சுற்றாடல் நிலைபேற்றுத் தன்மை மீது அக்கறை செலுத்தினார். ஆனால், டொனல்ட் ட்ரம்ப் சுற்றாடல் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய கொள்கைகளை மீளப்பெற்ற வேளையில், அவருடன் ட்ரம்ப் மஸ்க் முரண்டபட நேர்ந்தது.
இன்னொரு பக்கத்தில், தொழில்நுட்ப உலகில் எலன் மஸ்க்கின் செல்வாக்கு தீவிரம் பெறுவதைப் பார்த்து ட்ரம்ப் பொறாமைப்பட்டார். இந்த செல்வாக்கு தமது அரசியல் மேடைக்கு சவாலாக அமைந்து விடலாம் என அவர் அஞ்சினார்.
இரு ஆளுமைகளுக்கும் இடையில் எந்தப்புள்ளியில் பகைமை உருவெடுத்தது என்பதை துல்லியமாக கணிக்க முடியாவிட்டாலும்,
இதன் விளைவுகள் இருவருக்கும் பாதமாக அமையக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த மே மாதம் தாம் ட்ரம்ப் அரசில் இருந்து விலகிச் செல்வதாக மஸ்க் அறிவித்தார்.
டெஸ்லாவின் துணைக் கம்பனிகளுக்கு அரசாங்கம் வழங்கும் உதவிகளும், ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்தார்.
மஸ்க், சும்மா இருக்கவில்லை. பாலியல் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் நபரொருவர் பற்றிய ஆவணங்களில் ட்ரம்பின் பெயரும் உள்ளதென மஸ்க் குற்றம் சாட்டினார்.
இந்த ஆவணங்களை ட்ரம்ப் மறைப்பதாவும் அவர் சாடினார். இருபுறமிருந்தும் குற்றச்சாட்டுக்கள் பறந்தன.
இருவரும் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். தனிப்பட்ட விஷயங்களை பொது வெளிக்கு கொண்டு வந்தார்கள்.
சமூகத்தில் ஒருவருக்கு ஏதோவொரு விதத்தில் புகழும், நம்பகத்தன்மையும் இருக்கும் பட்சத்தில், அவற்றை சீர்குலைக்கும் வகையில் அஸ்திரங்களை வீசினார்கள். சேறு பூசிக் கொண்டார்கள்.
‘உலகைப் பிணைத்து வைத்திருக்கக்கூடிய சீமெந்து நட்பு’ என்று வூட்ரோவ் வின்சென் கூறினாலும், அந்த நட்பு உலக நலன் கருதி பாடுபடும் நல்லவர்களுக்கு மத்தியிலானதாக இருக்க வேண்டும்.
அப்போது, அது சீமெந்தாக இருக்கும். இதற்கு உதாரணம், கார்ல் மார்க்ஸ், ப்ரெட்ரிக் எங்கெல்ஸிற்கும் இடையிலான நட்பு.
இவர்கள் வெவ்வேறு பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். மனிதகுல மேம்பாட்டுக்காக திடசங்கற்பம் பூண்டவர்கள். சுயநல நோக்கங்களில் அன்றி, ஆழ்ந்த புலமையை அடித்தளமாகக் கொண்ட நட்பின் காரணமாக, உலகிற்கு மார்க்ஸிச சிந்தனைகள் கிடைத்தன.
இந்த நட்பில் பரஸ்பரம் அடுத்தவரின் நற்குணங்களை மதிக்கின்ற சிந்தனை இருந்தது. தமக்கிடையிலான நட்பு உலகில் ஆக்கபூர்வமான நம்பிக்கையும் காணப்பட்டது. மார்ஸ் – ஏங்கல்ஸ் நட்பானது, எத்தகைய சக்தி வாய்ந்த ஆளுமைகளாக இருந்தாலென்ன, அந்த ஆளுமைகள் நல்ல நோக்கங்களுக்காகவும் பொதுவான இலக்குகளுக்காகவும் கைகோர்க்கிறார்கள் என்றால், அந்த நட்பு அர்த்தபூர்வமானதொன்றை கட்டியெழுப்ப உதவும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைகிறது.
எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், எந்தப் பெறுமதியை மதிக்க வேண்டும் என்பதில் வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் சர்வ வல்லமை படைத்த ஆளுமைகளும் நட்பை உடைத்துக் கொண்டு பிரிந்து செல்லலாம் என்பதற்கு ட்ரம்ப் – மஸ்க் பகைமை தவறான முன்மாதிரியாக இருக்கிறது.
தமக்குக் கிடைக்கக்கூடிய சௌகரியங்கள், வணிக வாய்ப்புக்கள் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டதே, இவர்களின் தோழமை. இந்தத் தோழமைக்கு நேர்ந்த கதியானது, போலி நட்பினால் விளையக்கூடிய பாதிப்பின் பாடமாகத் திகழ்கிறது எனலாம்.
அரசியல் மற்றும் வணிக உலகுகளில் மார்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரைப் போன்று பொதுநலனுக்காக கை கோர்த்து உழைப்பதன் மூலம் நிலைபேறான நன்மைகளைப் பெறலாம். அத்தகைய நட்பே உலகிற்கு நன்மை தந்து உலகைப் பிணைத்து வைக்கக்கூடிய உண்மையான சீமெந்தாக இருக்கும்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை