பலதும் பத்தும்:- 24,05,2025 -காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன!
ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி!

மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு!
இலங்கை சிங்கள சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மறைந்த புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு தற்போது வௌியாகியுள்ளது. அதற்கமைய, மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெறும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
“இலங்கைக்கான பாடங்கள்” – சீன நாட்டு பேராசிரியர் யாழில் சிறப்புரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில்
சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சிறப்புரை இடம்பெற்றது.
“சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் முழுமையான வறுமை ஒழிப்பு: இலங்கைக்கான பாடங்கள்” எனும் தலைப்பில் குறித்த உரை நிகழ்த்தப்பட்டது. சிறப்புரை அமர்வில் பங்கேற்றவர்கள் இறுதியில் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
சீனாவின் தலைநகரான பீஜீங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச பகுதி ஆய்வுகள் கற்கை நிறுவனத்தின் உதவி பேராசிரியராக ஹீ யான் செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்?
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அடியவர்கள் அன்பளிப்பாக கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்களை திருடியது யார் ? என கேட்டு , ஆலய பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் இடம்பெற்றது.
அதன் போது, ஆலயத்தின் தற்போதைய நிர்வாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா?, கோவிலில் களவு போனமை தொடர்பிலான காவல்துறை முறைப்பாட்டை தலைவர் வாபஸ் வாங்க முற்பட்டது ஏன்?, தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்?, உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். அதனை அடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி ஆலயத்தின் தற்போதைய நிர்வாக சபையினரையும், ஆலய பக்தர்களையும் ஆலய சூழலில் சந்தித்து பிரச்சனை தொடர்பில் பேசவுள்ளதாக பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
ராக்கிங் வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன்
பல்கலைக்கழகத்தில் ராக்கிங் வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் - அதிரடி காட்டிய பொலிசார்.புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை ராக்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை ராங்கி தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் ராங்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்
அதையடுத்து அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மாணவியை தாக்கிய சக மாணவனை நேற்று இரவு பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் தமிழின அழிப்புக்கான மீண்டுமொரு நினைவுத்தூபி - நிறைவேற்ற தீர்மானம்
ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி
கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக கனடா தூதுவரை அழைத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்
மேலும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கனடாவில் ஸ்காப்ரோவில் மற்றும் ஒரு நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன!
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான செயலாளர் நாயகம் டொம் பிளெச்சர் இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் காசாவில் அழிவின் அளவு குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,இலங்கை உட்பட நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற அட்டுழியங்களை சர்வதேச சமூகம் தடுக்க தவறியதை காசா நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மனித உரிமை மீற்ல்கள் பாரியளவில் மீறப்பட்ட முன்னைய சந்தர்ப்பங்களில் ஐநா செயற்பட்ட விதம் குறித்த முந்தைய மீளாய்வுகளில்,மியன்மார் இலங்கை ருவாண்டா போன்ற நாடுகளில் இழைக்கப்பட்ட மீறல்களின் அளவு குறித்து ஐநா பேசத்தவறியது என தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே கொல்லப்பட்டவர்களிற்கும் மௌனமாக்கப்பட்டவர்களிற்கும் என்ன ஆதாரங்கள் தேவை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்?
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வேண்டுமென்று வெட்கம் அற்று மனிதாபிமானமற்ற நிலைமையை இஸ்ரேல் உருவாக்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.