இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்!
தமிழர்களுக்கான பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சி.வி.விக்கினேஸ்வரனின் காணொளி !

ஆர்மேனியாவிலும், ருவண்டாவிலும் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைப்போன்று, இலங்கையிலும் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சி.வி.விக்கினேஸ்வரனின் காணொளி வடிவ உரை ஒளிபரப்பப்பட்டது. அந்த உரையில் அவர் மேலும் கூறியதாவது:
வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் என்னால் முன்மொழியப்பட்ட 'தமிழின அழிப்பு தீர்மானம்' கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வடமாகாணசபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தின் ஊடாக இலங்கை அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், உள்ளக ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட உண்மையை அறியும் ஆணைக்குழுக்கள்மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதற்கான வழிகாட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இது இவ்வாறிருக்க அண்மையகாலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் அரச திணைக்களங்களால் சுவீகரிக்கப்பட்டுவருவதுடன், அரச கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் பௌத்த பிக்குகளால் தீவிர பௌத்த சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரான்ஸில் 47 மாநகரசபைகள் இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அதனையொத்த தீர்மானங்கள் இந்தியாவின் தமிழக அரசாங்கத்தினாலும், கனேடிய பாராளுமன்றத்தினாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் ஆர்மேனியாவிலும், ருவண்டாவிலும் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைப்போன்று, இலங்கையிலும் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் 5 நிரந்தர உறுப்புநாடுகளில் ஒன்றான பிரான்ஸ், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்தார்.