முதலமைச்சரை சல்யூட் அடிக்க வைத்த ராஜேஸ்வரி! ஜேஇஇ தேர்வில் வென்றது எப்படி?
முதலில் ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது, நிறைய சந்தேகங்கள் வரும். ஆனால் நான் ஒரு முடிவுடன் இருந்தேன். எப்படியாவது ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற வேண்டும் என உறுதியுடன் இருந்தேன் என மாணவி ராஜேஸ்வரி கூறினார்.

முயற்சியை கை விடாமல் தொடர்ந்து பயிற்சி எடுத்தேன், அதன் விளைவாக தற்போது ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி-இல் உயர் கல்வியை தொடர இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என மாணவி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
சேலம் அருகே உண்டு உறைவிட பள்ளியில் படித்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்று தனது கனவை நனவாக்கியுள்ளார். அவரது சாதனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சல்யூட் அடித்து, மாணவியின் உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாணவி ராஜேஸ்வரி தான் கடந்து வந்த பாதை, தனக்கு ஊக்கம் அளித்தவர்கள், தனது அயராத முயற்சி குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது அரசு சார்பில் காலை மற்றும் மாலை நடத்தப்பட்ட ஆன்லைன் ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இதன் மூலம் ஜே.இ.இ பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இதன் பின்னர் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு எழுதுவதற்கு தேர்வு ஆனேன்.
ஆங்கிலத்தில் படிப்பதற்கு கடினமாக இருந்தது: பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தேன். நான் தமிழ் வழியில் படித்ததால் அந்த மையத்தில் ஆங்கிலத்தில் படிப்பதற்கு கடினமாக இருந்தது. ஆனால், நான் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்ததால் தற்போது ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஐஐடியில் சேர்ந்து படிக்க உள்ளேன்.
அதிக சந்தேகம் வரும்: அரசு நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் வடமாநில ஆசிரியர்கள் உள்பட தமிழ் ஆசிரியர்களும் நன்றாக பயிற்சி அளித்தனர். பாடம் அங்கிலத்தில் தான் கற்பிக்கப்பட்டது. முதலில் எனக்கு ஆங்கிலம் புரிந்து படிக்க கடினமாக இருந்தது. ஆனால், நான் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்று முழு முயற்சியில் இறங்கினேன்.
அதனால், நான் ஆங்கல மொழியையும் தனியாக கற்று வந்தேன். எனக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் ஆசிரியர்கள் பொறுமையாக சொல்லிக் கொடுத்தனர். மேலும் பயிற்சி மையத்தில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதிகளையும் அரசு சிறப்பாக செய்து கொடுத்திருந்தது.
என்னைப் போல் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கிலம் தெரியவில்லை என படிப்பை ஒதுக்கி வைக்காமல் முயற்சி செய்து படியுங்கள். மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலமும் சுலபமான ஒரு மொழி தான். எனது முயற்சிக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் உறுதுணையாக இருந்தனர்.
முதலமைச்சர் வாழ்த்து பெரும் மகிழ்ச்சி: மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் எனது உயர் கல்வி செலவு அனைத்தையும் அரசு ஏற்கும் என அறிவித்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
என்ன படிக்க போகிறேன்? சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியில் படிப்பை படிக்க விரும்புகிறேன். எனது குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி. தற்போது கல்லூரி கலந்தாய்வில் கலந்து கொள்ள செங்கல்பட்டு மாவட்டம் குமிழியில் உள்ள ஏகலைவா பழங்குடியினர் நலன் உண்டு உறைவிட அரசுப் பள்ளியில் தங்கி உள்ளேன். இங்கு ஆங்கில பயிற்சிகள் உள்பட பல்வேறு திறன் பயிற்சிகள் எடுத்து வருகிறேன்” என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய செங்கல்பட்டு மாவட்டம் குமுளியில் உள்ள ஏகலைவா பழங்குடியினர் நலன் மாதிரி உண்டு உறைவிட அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து நம்மிடம் கூறினார். அப்போது பேசிய அவர், “சமீபத்தில் பழகுடியின மாணவர்கள் நல்ல மதிபெண்கள் பெற்று பெரும் கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். தற்போது ராஜேஸ்வரி ஐஐடி-யில் படிக்க போவதே ஒரு புரட்சி தான்.
நீட், கியூட், ஐ.எம்.யு, ஜே.இ.இ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன. 80 வருட வரலாற்றில் முதன்முறையாக பழங்குடியினர் நலன் அரசு பள்ளியில் படித்த மாணவி ஐஐடி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு தேர்வாகியுள்ளது பெருமை.
மேலும் பலர் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தகுதி உடையவர்களாக மாறி உள்ளனர். பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்த பிறகு அங்குள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள், தன்னம்பிக்கை உள்ளிட்ட பல்வேறுத் திறன் பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன“ என்று அவர் கூறினார்.