நீயா? நானா? சுமந்திரன் அவர்களுக்கு.... தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் அனுப்பி வைத்த அறிவித்தல்.
“சாத்தான் வேதம் ஓதிய கதை”

சுமந்திரன் அவர்களுக்கு.... எனும் தலையங்கமிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிவித்தல்.
மக்களை நான் (சுகாஷ்) தவறாக வழிநடாத்துவதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தபோது “சாத்தான் வேதம் ஓதிய கதை” நினைவுக்கு வந்தது.
மக்களைத் தவறாக வழிநடாத்துவது நானா? நீங்களா?
நீங்கள் பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்த 2010களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பகிரங்க விவாதத்தில் “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தவறானது” என்று கூறி விடுதலைப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்தது நானா? நீங்களா?
தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்று பச்சைப் பொய்யைக் கூறி இலங்கை அரசைக் காப்பாற்றியது நானா? நீங்களா?
தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை (Genocide) வெறும் யுத்தக் குற்றங்கள்” (War crimes) என்று மலினப்படுத்தியது நானா? நீங்களா?
2015 - 2019 மைத்திரி - ரணில் ஆட்சியில் அறிமுகப்படுத்த முற்பட்ட ஒற்றையாட்சிக்குட்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய யாப்பைச் சட்டம் தெரிந்த சட்டத்தரணியாக இருந்தும் வெட்கமே இல்லாமல் “சமஷ்டி” என்று பொய்யுரைத்தது நானா? நீங்களா?
முன்னாள் ஜனாதிபதிகள் ரணிலோடும் ராஜபக்ஷாக்களோடும் மாறி மாறிக் கொஞ்சிக்குலாவி தமிழினத்தையே சிங்களத்திடம் அடகு வைத்தது நானா? நீங்களா?
சிங்கள பௌத்த பேரினவாத JVP யோடு சேர்ந்து மே தின ஊர்வலத்தில் பங்கேற்றுச் சிங்களக் கட்சிகளுக்குத் தமிழர் தாயகத்தில் அங்கீகாரம் கொடுத்தது நானா? நீங்களா?
தமிழினத்திற்கான தீர்வைப் பெறக்கூடிய பல சந்தர்ப்பங்களை அற்பச் சலுகைகளுக்காகச் சிங்களத்திடம் அடமானம் வைத்தது நானா? நீங்களா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணையைக் கோராது உள்ளக விசாரணையான “கலப்புப் பொறிமுறைக்கு” இணக்கம் தெரிவித்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் துரோகமிழைத்தது நானா? நீங்களா?
தமிழ் மக்கள் இராணுவப் பிரசன்னத்தை எதிர்த்துநிற்க STF பாதுகாப்பில் உலா வந்தது நானா? நீங்களா?
இராணுவத்துக்கு எதிராக ஹர்த்தால் என்று நாடகமாடிவிட்டு, உலகத்திலேயே முதல் தடவையாக காலையோடு ஹர்த்தாலை நிறைவுசெய்த அரசியல் வேடதாரி நானா? நீங்களா?
இப்படி உங்களின் அரசியல் துரோகங்களும் திருகுதாளங்களும் இன்னும் நிறையவே இருக்கின்றது.
மக்களைத் தவறாக வழிநடாத்துபவனாக இருந்திருந்தால், நீங்களும் உங்கள் மகளும் ஒன்றாக இருந்த புகைப்படத்தைச் சிலர் தப்பாகச் சிருஷ்டிக்க முற்பட்டபோது, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முதலாவது நபராக முன்வந்து பகிரங்கமாக அந்த விடயத்தைக் கண்டித்திருக்க மாட்டேன்!
இப்பொழுதும் கூறுகின்றேன், தமிழினத்தின் தற்போதைய கையறு நிலைக்கு நீங்களும் உங்கள் கட்சியுமே பிரதான காரணம்.
நான் ஏதேனும் தவறாக அல்லது பொய்யாக எழுதியதாகக் கருதினால், நீங்கள் தாராளமாக எனக்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.நீதிமன்றத்தில் சந்திப்போம்!
பிற்குறிப்பு: தயவுசெய்து இனியாவது இனத்தைக் காட்டிக் கொடுத்து அரசியல் பிழைப்பு நடத்தாது திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள். அல்லது வரலாறு உங்களை மன்னிக்காது.
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.