Breaking News
மீண்டும் பிறப்பேன் விடுதலைக்கு போரிடுவேன்!
ஜூன் 5, உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் ஒரு நாள்.

பொன் சிவகுமாரனின் நினைவு தினம்
இன்று, ஜூன் 5, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனது உயிரை ஆகுதியாக்கிய, தியாக தீபம் பொன் சிவகுமாரனின் நினைவு நாள். காலம் கடந்து நிற்கும் அவரது தியாகம், தலைமுறை தலைமுறையாகத் தமிழ் இளையோர் மனதில் அணையாச் சுடராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சுடரின் ஒளி, அடக்குமுறையின் இருளைக் கிழித்து, சுதந்திரத்தின் விடியலை நோக்கிய பயணத்திற்கு இன்றும் வழிகாட்டுகிறது.
யாழ்ப்பாணம் உரும்பிராயின் மண்ணில் உதித்த அந்த இளம் சூரியன், மாணவப் பருவத்திலேயே தமிழின உணர்வின் அனலைக் கொண்டிருந்தார். 1958 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரத்தின் கோரத் தாண்டவம், அவரது சகோதரி பட்ட துயரம், அவர் மனதில் விடுதலைக்கான விதையை ஆழமாகப் பதித்தது. அது ஒரு வெறுமனே தனிப்பட்ட துயரல்ல, ஒட்டுமொத்த இனத்தின் ஓலமாய் அவர் உணர்ந்தார். அந்த விதை, நாளடைவில் போராட்டக் கனலாய் வெடித்து, வீரம் செறிந்த இளம் புரட்சியாளனை உருவாக்கியது.
1970களில், சிங்களப் பேரினவாதம், கல்வித் தரப்படுத்தல் என்னும் நச்சு வலையை விரித்து, தமிழ் மாணவர்களின் உயர் கல்வி கனவுகளைச் சிதைக்க முனைந்தபோது, பொன் சிவகுமாரன் அதனை எதிர்த்து நிற்கும் முதல் அஞ்சாநெஞ்சனாக எழுந்தார். மாணவர் சமூகத்தை ஒன்றிணைத்து, அவர்களது உரிமைகளுக்காக, கல்விச் சமத்துவத்திற்காக, எதிர்கால வாழ்வுக்காக வீர முழக்கமிட்டார். அவரது குரலில் ஒலித்தது வெறும் கோரிக்கை அல்ல, அது அடிமைப்பட்டுப் போன ஒரு சமூகத்தின் தார்மீகக் கோபம்.
விடுதலைக்கான அவரது பயணம், முட்களும் ,ஆபத்துக்களும் நிறைந்த , பாதையில் சமரசத்துக்கு இடமின்றி தொடர்ந்தது. சிங்களப் படையினரின் வலைக்குள் சிக்காமல், அவர்களது கொடிய கரங்களில் சிக்குண்டு, தமிழ் இனத்தின் கௌரவம் குலையக் கூடாது என்பதற்காக, தனது 23வது வயதில், சயனைட் அருந்தி இன்னுயிரை ஈந்த அந்தத் தியாகம், வெறும் ஒரு மரணமல்ல. அது ஒரு பெரும் போராட்டத்தின் அஸ்திவாரம். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சின்னமாய், அவர் தனது மரணத்தின் மூலம் காலத்தால் அழியாத ஒரு பாடத்தை எழுதினார். அவரது மரணம், ஒரு விதை; அந்த விதை, இன்று பெரும் விருட்சமாய் வளர்ந்து, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு, தியாகத்தின் உயரிய இலக்கணத்தை உணர்த்துகிறது.
இந்த நினைவு நாளில், பொன் சிவகுமாரனின் வீரத்தையும், தீரத்தையும், அற்பணிப்பையும் போற்றி வணங்குவோம். அவரது தியாகம், வெறும் ஒரு நினைவு மட்டுமல்ல, அது தமிழ் மக்களின் விடுதலைக்கான கனலைத் தொடர்ந்து அணையாது காக்கும் உந்துசக்தி. தமிழீழ மாணவர் எழுச்சி நாளாகவும் போற்றப்படும் இந்த ஜூன் 5, நமக்கு ஒரு நினைவூட்டல். உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் ஒரு நாள்.
பொன் சிவகுமாரன் என்றும் எங்கள் நெஞ்சங்களில் வாழ்வார். அவரது தியாகத்தின் ஒளியில், தமிழ் இனத்தின் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்.
சிவா சின்னப்பொடி