அதிமுகவின் எஃகு கோட்டையில் களமிறங்கும் விஜய்? ஒரே போஸ்டரால் பரபரக்கும் அரசியல் களம்!
எம்ஜிஆர் பாணியை பின்பற்றி தென் மாவட்டத்தில் இருந்து விஜய் தனது முதல் வெற்றியை எதிர்பார்க்கிறாரா?

கடந்த 25 ஆண்டுகளாக திமுகவுக்கு சிம்ம சொப்பனமாகவும், அதிமுகவின் வெற்றிக்கோட்டையாக இருக்கும் மதுரை மேற்கு தொகுதியில், தவெக தலைவர் விஜய் போட்டியிடுவாரா? என்ற கேள்வி அரசியல் தெரிந்த அனைவரிடமும் இயல்பாகவே எழுந்துள்ளது. 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில் தவெக நிர்வாகிகள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தலைவர் விஜய் என அச்சிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தங்கள் தொகுதியில் தலைவர் போட்டியிட வேண்டும் என போஸ்டர் ஒட்டுவதும், தேர்தல் நேரத்தில் தலைவர் பெயரில் விருப்ப மனு கொடுப்பதும் காலங்காலமாக நடைபெறும் வழக்கமாக நடைமுறையாகும்.
மேலும், 50 ஆயிரம் வாக்குகள், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்களின் தலைவர் வெற்றி பெறுவார் என்று பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இதற்கு முன்பு போஸ்டர் அடிந்த நிகழ்வுகளும் தமிழகத்தில் பலமுறை நடைபெற்றுள்ளது. ஆனால், 1,10,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என தவெக நிர்வாகிகள் அடித்த போஸ்டர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சித் தலைமை அந்த தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதன் பேரில், இந்த போஸ்டர் அடிக்கப்பட்டதா? அல்லது தமிழக முழுவதும் கவனத்தை பெற வேண்டும் என்று எண்ணத்தில் தவெக நிர்வாகிகள் அடித்த போஸ்டரா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. சுமார் 3 லட்சம் வாக்களர்களை கொண்ட மதுரை மேற்கில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயம் களமிறகுவார்கள் என்ற நிலையிலும், தவெக தொண்டர்கள் இந்த போஸ்டரை அடித்து அரசியல் அரங்கில் பரபரப்புக்கு வித்திட்டுள்ளார்கள்.
மதுரை மேற்கு தொகுதி:
இதே மதுரை தெற்கு தொகுதியில் 1980இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வரானார் எம்ஜிஆர். அன்று முதல் இன்று வரை அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் அத்தொகுதியில், அதிமுக வேட்பாளர்களே கடந்த 5 தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று வருகிறாகள். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அத்தொகுதியில் இருந்து கடந்த 2011,2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து வென்றுள்ளார்.
குறிப்பாக, தற்போதைய பிடிஆரின் தந்தையார் பழனிவேல் ராஜன் இதே தொகுதியில் 2001இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்த வகையில் கடந்த 25 ஆண்டுகளாக திமுகவுக்கு சிம்ம சொப்பனமாகவும், அதிமுகவின் வெற்றிக்கோட்டையாக இருக்கும் அந்த தொகுதியில், தவெக தலைவர் விஜய் போட்டியிடுவாரா? என்ற கேள்வி அரசியல் தெரிந்த யாருக்கும் எழாமல் இருக்காது.
ஆனால், இது அனைத்துமே 2021 தேர்தலுக்கு முன்பு உள்ள கள நிலவரம், 2024 மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு சென்றதையும் இதோடு இணைத்து பார்க்க வேண்டிய தேவை உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவுக்கு பிறகு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஒரு தேக்கம் இருப்பதாகவும், அதை பயன்படுத்தி தங்களது தலைவர் மதுரையில் இருந்து வெற்றிக்கணக்கை துவங்க வேண்டும் என தவெக நிர்வாகிகள் எதிர்பார்ப்பது எதார்த்தமான ஒன்றுதான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
5 முறை தொடர் தோல்வியால் அதிருப்தியில் இருக்கும் திமுக, இந்த முறை தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பொறுப்பை திமுக தலைமை அமைச்சர் மூர்த்தியிடம் கொடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், 4ஆவது முறையாக தொகுதியை கைப்பற்ற செல்லூர் ராஜூ தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக, அதிமுக தலைவர்களின் முதல் தேர்தல்:
திமுக தலைவர்களான அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வரை முறையே காஞ்சிபுரம், குளித்தலை, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில் போட்டியிட்டு தங்களது அரசியல் வாழ்வை தொடங்கினர். இதில் ஸ்டாலின் மட்டுமே ஆயிரம் விளக்கு தொகுதியில் 1984இல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தார். மற்ற அனைவரும் தங்களது முதல் தேர்தலில் வென்றனர். திமுக தலைவர்கள் பெரும்பாலும் வட மாவட்டஙகளில் போட்டியிட்டே தங்களது முதல் தேர்தல்களில் வென்றுள்ளனர்.
அதற்கு முற்றிலும் மாறாக எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ள தலைவர்கள் தென் மாவட்டங்களில் போட்டியிடவே அதிகம் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக 1977இல் அருப்புக்கோட்டை தொகுதியில் களமிறங்கிய எம்ஜிஆர், வரலாற்று வெற்றியை பெற்று முதல் முறையாக அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார். அதே போன்று, தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, போடி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் வென்றுள்ளார். குறிப்பாக 1977, 1980, 1984 தேர்தல்களில் முறையே அருப்புக்கோட்டை, மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி என தென் மாவட்டங்களை சேர்ந்த தொகுதிகளில் போட்டியிட்ட எம்ஜிஆர், மூன்று முறையும் வென்று அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
அந்த வகையில், எம்ஜிஆர் பாணியை பின்பற்றி தென் மாவட்டத்தில் இருந்து விஜய் தனது முதல் வெற்றியை எதிர்பார்க்கிறாரா? அல்லது அதீத ஆர்வம் காரணமாக தொண்டர்கள் இவ்வாறு போஸ்டர் அடிக்கிறார்களா? என்பதற்கான பதில் இன்னும் சில மாதங்களுக்கு பிறகே தெரிய வரும்.