மே 18 இனவழிப்பு நாள் - சுடரேந்திய தொடரோட்டம்.
ஆர்மேனியர்களுக்கு நடந்த படுகொலைகளை உலகம் ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆர்மேனியர்களுக்கு நடந்த படுகொலைகளை உலகம் ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கேட்டு நடக்க வேண்டிய தூரமும் வெகு தொலைவாகவே இருக்கும். அதைப் பார்க்க நாம் உயிரோடு இல்லாது போனாலும், நமது ஏதோ ஒரு தலைமுறை அதை நிகழ்த்திக் காட்டும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆக, நாம் இப்போது செய்யவேண்டியது தொடர்ச்சியாக இந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தியபடி நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டியதுதான். அதேவேளை எமது இயக்கம்/இயக்கங்கள் 'விடுதலை'யின் பெயரால் நிகழ்த்திய அநீதிகளையும் நாம் மனதார ஒப்புக்கொண்டாக வேண்டும். இல்லாதுவிட்டால் நாம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பொருட்டு கோரிநிற்கும் நீதியில் அர்த்தமிருக்காது.
இந்த யுத்தம் முடிந்த பின், 16 வருடங்களின் பின்னும், இந்த நாடு வளர்ச்சிப்பாதையில் போகாமலும், தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் குரல்களை அசட்டை செய்தும் கொண்டிருக்கின்றதென்றால், நிச்சயம் இலங்கையில் நடந்த ஆயுதப்போராட்டங்களினால்தான் அந்த நாடு உருப்படாது போனது என்று மனச்சாட்சியுள்ள எந்த இலங்கையரும் இனியும் சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். மாறவேண்டியதும்/மாற்றவேண்டியதும் இந்த அரசு/அரசாங்கங்கள் கொண்டிருக்கின்ற சிந்தனைகளையும், அவர்களினூடு ஏதோ ஒருவகையில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதத்தையுந்தான். போர் முடிந்து வருகின்ற தேர்தல்களில் பெரும்பான்மை ஆட்சியமைக்கின்ற ஒவ்வொரு சிங்களக் கட்சிக்கும் இனப்பிரச்சினையை எளிதாகத் தீர்க்கின்ற தீர்ப்புக்கள் மக்களால் அளிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் அரசமைக்கும் அவர்கள் கோருவதோ இதையெல்லாம் மறந்து 'இலங்கையர்கள்' என்ற ஒற்றைக்குடைக்குள் வந்தால் எல்லாமே மறக்கப்பட்டு நாடு சுபீட்சம் அடைந்துவிடும் என்பதாகும்.
இன்றைய ஜேவிபி கூட்டு அரசின் ஜனாதிபதியான அநுரவே அடிக்கடி தமது கொல்லப்பட்ட தோழர்களை, தமது இயக்கம்/கட்சி எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளை நினைவுபடுத்தித்தான் பேசிக் கொண்டு இருக்கின்றார். கடந்தகால அரசுக்களால் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு மட்டுமில்லை, உங்கள் தோழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் பொதுமன்றில் கொண்டுவருவதற்கு இதைவிட வேறொரு அரிய தருணம் எதுவுமில்லை என்று நீங்கள் அறிவீர்கள். மேலும் நீங்கள் இன்று ஏறிநிற்கும் ஜனாதிபதி என்ற அரியாசனம் கூட, கொல்லப்பட்ட உங்கள் தோழர்களின் புதைகுழிகளின் மேல்தான் இருக்கின்றது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
எது நடக்கின்றதோ/ இல்லையோ நாம் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை தொடந்து நினைவுபடுத்தியபடி இருப்போமாக.
அது சுடரேந்திய தொடரோட்டம்!
**"
(படம்: நன்றி இணையம்)