வடக்கு மகாணத்தில் காணிகள் தொடர்பில் வர்த்தகமானியை மீளப் பெற்றுக் கொண்ட சம்பவம் அரசாங்கத்தின் புலனாய்வு சார்ந்த விடயத்தின் உள்ளடக்கமாகும்.
வடக்கு அரசியல்வாதிகள், சிவில் தரப்புகள் போராடத் தவறவில்லை. ஆனால் அவ்வகை போராட்டங்கள் பொறுத்து அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்பதே முக்கியமான புரிதலாகும்.

இலங்கை அரசியலில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தகமானி ஒன்றை மீள பெற்றிருக்கின்ற விடயம் அதிக பேசுபொருளாக சமகாலத்தை மாறியுள்ளது. அவ்வாறான வர்த்தகமானியை மீளப்பெறுதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது. வடக்கு மகாணத்தில் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உரிமை கோரப்படாத நிலங்கள் அரசுடமையாக்கப்படும் என்ற வர்த்தகமானியே மீளப்பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிகமான உரிமை கோரல்களும் நம்பிக்கை ஊட்டல்களும் வெற்றிகரமான சாதனைகளை நிலைநாட்டியுள்ளதாகவும் வடக்கு அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அவை சார்ந்த ஊடகங்களும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் யதார்த்தத்தை தேடுவதாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
வெளியான வர்த்தகமானி தென் இலங்கை ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கு மக்களின் காணி உரிமை பொறுத்து எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது வடக்கு கிழக்கு மீதான ஆக்கிரமிப்பின் நீட்சியையே அத்தகைய வர்த்தகமானி வெளிப்படுத்தி நிற்கின்றது. இத்தகைய சூழலில் வர்த்தகமானி மீளப்பெறப்பட்டதற்கு உரிமை கோருவது அரசியல்வாதிகளின் அநாகரிகத்தையே காட்டுகிறது.
இவ்வாறு கடந்த காலங்களில் தமிழ் மக்களின் விடயங்களை அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை தேடுவது அவசியமானது. குறைந்தது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னராவது அத்தகைய நடவக்கையில் மாற்றம் ஏதும் நிகழ்ந்ததா என்பது பிரதான கேள்வியாகும். குறைந்தது பயங்கரவாத தடைச் சட்டம் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு போன்றன அரசாங்கத்தின் நடவடிக்கையில் இருந்து விலக்கிக் கொள்வதற்கு வடக்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அவற்றுக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்திலே உள்ளன. நீதி மன்றில் வழக்குகள் இருக்கும் போதே விகாரைகள் கட்டப்பட்டன. ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தன. வடக்கு அரசியல்வாதிகள் சிவில் தரப்புகள் போராடத் தவறவில்லை. ஆனால் அவ்வகை போராட்டங்கள் பொறுத்து அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்பதே முக்கியமான புரிதலாகும்.
வடக்கு அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட கையெழுத்து போராட்டங்களையும் சிவில் அமைப்புகள் பல போராட்டங்களையும் நிகழ்த்திய போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை. வடக்கு மகாணத்தில் காணிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட வர்த்தகமானியை மீளப் பெற்றுக் கொண்ட சம்பவம் அரசாங்கம் சார்ந்த அரசாங்கத்தின் புலனாய்வு சார்ந்த விடயத்தில் உள்ளடக்கமாகும். அதனை புரிந்து கொள்ளாமல் உரிமை கோருவதும் தமிழ் தரப்புகள் அதனை ஒரு பிரச்சாரமாக நிகழ்த்துவதும் வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு தமிழ் மக்களையும் அவர்களது அனுபவிக்கும் துயரத்தையும் போராட்டங்களையும் அவமதிப்பதாகவே உள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் வடகிழக்கு மக்கள் எதையும் தெரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என்ற நினைப்புடன் பிரச்சாரங்களும் பிரச்சார நடைமுறைகளும் அரங்கேற்றப்படுகிறது. ஆனால் அதன் யதார்த்தம் வேறு. அதனை முழுமையாக விளங்குதல் அவசியமானது.
முதலாவது ஜேவிபி அரசாங்கம் வடக்கு கிழக்கு மகாணத்தில் காலுண்டுவதற்கான வாய்ப்புகளை இத்தகைய வர்த்தகமானி வெளியீடு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் அடைந்த எழுச்சியை உள்ளூராட்சி மன்றத்தில் பெற முடியாவிட்டாலும் குறிப்பிட்ட அளவு வாக்குகளையும் ஆசனங்களையும் ஜேவிபி அரசாங்கம் பெற்றிருக்கின்றது. வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முடியாத நிலையே தவிர தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களித்துள்ளனர். அதில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்ச உணர்வு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை முழுவதையும் கைபற்றி ஆட்சி செய்வதென்பதை விட வடக்கு கிழக்கை ஆளுவதென்பதே தென் இலங்கையின் பிரதான இலக்காகும். தமிழ் மக்கள் தென் இலங்கையுடன் இருக்கிறார்கள் என்ற உணர்வே தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தேவையாகும். அதிலும் ஜேவிபியினருக்கு அத்தகைய அவா அதிகமானது.
இரண்டாவது, வடக்கு கிழக்கு அரசியல் வாதிகளும் அவர்களது தேசிய அரசியல் கொள்கைகளும் மீளவும் எழுச்சி பெறுவதற்கு வாய்ப்பை கொடுத்துவிடும் என்ற நிலைப்பாடும் ஜேவிபியினருக்கு உரிய அச்சமாகும். தமிழ் தேசிய மிதவாத அரசியல் சக்திகளின் மீள் எழுச்சிக்கு இத்தகைய வர்த்தகமானி காரணமாக அமைந்து விடும் என்ற புலனாய்வுத் துறையின் அறிக்கையும் ஜேவிபி அரசாங்கத்துக்கு நெருக்கடியானதே. அது தொடர்பிலான தமிழ் தரப்பின் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் பிரச்சாரமும் வடக்கு கிழக்கில் ஜேவிபிக்காக பணிபுரியும் தரப்புகளை சங்கடத்துக்குள் தள்ளியுள்ளது. அத்தகைய நெருக்கடியில் இருந்து அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு வர்த்தகமானி மீளப்பெறுதல் அவசியமானது என்பதை அத்தரப்புகள் ஜேவிபி அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளன. அதனை அத்தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மூன்றாவது, இலங்கை தீவின் அரசியல் பொறுத்து புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளில் சர்வதேச மட்டத்தில் அதிக நெருக்கடிகளும் அழுத்தங்களும் ஏற்பட தொடங்கியுள்ளன. அத்தகைய அழுத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் செய்முறையையும் பாதிக்கக் கூடியதாக அமைந்துவிடுமா என்ற குழப்பம் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை சார்ந்து வெளிவருகின்ற அறிக்கைகளும் ஐரோப்பிய யூனியன் அறிவிப்புகளும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் முன்வைப்புகளும் அதிக அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி கனடாவில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி அதன் பிற்பாடு பல்வேறு நகரங்களில் அதே போன்ற தூபிகளை அமைக்கின்ற நடைமுறைகளும் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டில் எதிர்க்கட்சிகளின் எழுச்சியும் தீவிர போக்குடைய கட்சிகளின் நடவடிக்கைகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை ஜேவிபி அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. இதனால் இவ்வாறான வர்த்தகமானிகள் மேலும் சர்வதேச அழுத்தத்தையும் நெருக்கடிகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் என்ற குழப்பம் உருவாக்கியுள்ளது.
நான்காவது வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் தீவிரமான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்ததோடு தமிழ் முஸ்லிம்களுக்கு இடையிலே காணி தொடர்பில் நட்புறவு அணுகுமுறை ஒன்று ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வர்த்தகமானி வடக்கு கிழக்கு அரசியலை அல்லது தமிழ் முஸ்லீம் தேசிய அரசியலை புதுப்பித்து விடும்(?) என்ற அடிப்படையில் குழப்பத்தை தென் இலங்கை சந்தித்துள்ளது. அதனால் இவ் வர்த்தகமானியை மீளப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இது தமிழ் முஸ்லிம்களுக்கு இடையிலே ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகளை கையாளுவதற்கும் வடக்கு கிழக்கு தமிழ்த் தேசிய அரசியலை கையாளுவதற்கும் இத்தகைய நடைமுறைகளை மேற்கொள்வது அவசியமானதாக காணப்படுகிறது.
ஐந்தாவது, இலங்கைத்தீவின் அரசியலையும் அதன் நீண்ட செய்முறைகளையும் அவதானிக்கின்ற சூழலில் வர்த்தகமானி மீளப்பெறுதல் என்பது அரசாங்கத்தின் அல்லது ஆட்சியாளர்களின் நலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்டதே அன்றி தமிழ் மக்களின் உத்தரவாதப்படுத்தப்பட்ட காணின் உரிமம் சார்ந்து நிகழ்த்தப்படவில்லை. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இராணுவம் தனது தேவைக்காக வைத்திருக்கிறது. வடக்கு கிழக்கு முழுவதும் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தில் இராணுவமே உற்பத்தி நடவடிக்கையிலும் அதன் மூலமான பொருளாதாரம் இலாபங்களையும் அடைந்துவருகிறது. அது மட்டுமன்றி அந்நிலத்தை அத்தகைய தரப்பு தனது உடமையாக்கி வருகின்றது. உரிமை கோரப்பட்ட காணிகளில் விகாரைகள் அமைப்பதும் இராணுவ முகாங்களை நிறுவுவதும் ஒரு மரபான செய்முறையாக இலங்கை அரசியல் பரப்பில் காணப்படுகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த எத்தனமும் எடுக்காது மாறாக உரிமை கோரப்படாத காணிகள் மீது அரசுடமையாக்குகின்ற செய்முறை என்பது ஜேவிபி அரசாங்கத்தின் எண்ணத்தை தெளிவு படுத்துகிறது. முப்பது வருடங்களுக்கு மேல் போருக்குள் பாதிக்கப்பட்ட ஒர் இனத்தின் காணிகள் உரிமை கோருவதற்கோ உரிய தகவல்களை பராமரிப்பதற்கோ முடியாது என்பது தெரிந்தவிடயம். உரிமங்கள் காணாமல் போனதும் அவை அழிவடைந்து போனமையும் மீள பெற்றுக் கொள்ள முடியாத சூழலை கடந்தகால அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருப்பவையும் தெரியாத விடயம் கிடையாது. நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பெருமளவுக்கு காணி உரிமங்களை இழந்தவர்களாகவே காணப்படுகிறனர். இலங்கை அரசாங்கம் ஜேவிபி அரசாங்கம் இடதுசாரி அரசாங்கம் எனக் குறிப்பிடும் அரசாங்கம் உரிமை கோரப்படாத வடக்கு மகாணத்திலுள்ள காணிகளை கைப்பற்றுவதற்கு ஒரு வர்த்தகமானியை வெளியிட்டுள்ளது என்பது அதன் கொள்கையைக் கண்டு கொள்ளப் போதுமானது. அத்தகைய வர்த்தக மானியயை அரசாங்கம் வெளியிட்டதன் மூலம் இனவுணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்திலும் மீளவும் இவ்வாறான வர்த்தகமானி வெளிவராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. கைப்பற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலங்களை மீள ஒப்படைக்காமல் மேலும் மேலும் வர்த்தகமானி மூலம் காணியை அபகரிக்கும் செய்முறை ஒன்றை இந்த அரசாங்கம் மேற் கொண்டுவருகிறது என்பது அதன் நடைமுறையை காட்டுகிறது. இது எல்லாவற்றையும் விடுத்து வர்த்தக மானியை மீளப்பெறப்பட்டதை கொண்டாடுவது அவமானகரமான அரசியலாகவே தெரிகிறது.
எனவே இலங்கையின் சட்ட வரைபிலோ அல்லது நீதித்துறையிடமே தமிழ் மக்கள் நியாயம் கோர முடியாது என்பது கடந்தகால அனுபவமாகும். அதனை கவனத்தில் கொள்வதும் அதற்கான அணுகுமுறைகளை முன்னெடுப்பதும் அவசியமானது. கல்லோயா குடியேற்ற முதல் சமகாலம் வரை ஒரு துண்டு நிலத்தையும் வடக்கு கிழக்கில் அரசியல் செய்யும் அரசியல் வாதிகளால்; பாதுகாக்கவோ குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவோ முடியவில்லை. அவ்வாறான சூழலுக்குள் இதே போன்ற வர்த்தகமானிகள் மீள வராது தடுக்கும் நடைமுறையை கவனத்தில் கொள்ளுதல் அவசியமானது. வடக்கு கிழக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் தொல்லியல் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றி வைத்திருக்கும் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலங்களை மீட்பதற்கான அணுகுமுறைகளை வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வது அவசியமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-