வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்- சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன சந்திப்பு!
மாங்குளம் மருத்துவமனை தவிர்ந்த ஏனைய 3 மருத்துவமனைகளுக்கும் ஆளணி இன்னனும் அனுமதிக்கப்படவில்லை!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தினார்.
இந்தவேளையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன, இதனுடன் தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக ஆளுநரிடம் குறிப்பிட்டார்.
மேலும் வட மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கு தாதியர்கள் நியமிக்கப்பட்ட போதும் அதேயளவு எண்ணிக்கையான தாதியர்கள் இங்கிருந்து சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
பல மருத்துவமனைகளில் இன்னமும் தாதியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்டதுடன், அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரினார்.
இதன் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மேலும் நூற்றுக்கணக்கான தாதியர்களுக்கு நியமனம் வழங்கவுள்ளதாகவும், அதன்போது இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் வடக்கு ஆளுநர், நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்ட 4 விசேட மருத்துவ அலகுகளையும் இயக்குவதற்கான ஆளணி தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மாங்குளம் மருத்துவமனை தவிர்ந்த ஏனைய 3 மருத்துவமனைகளுக்கும் ஆளணி இன்னனும் அனுமதிக்கப்படவில்லை என ஆளுநர் குறிப்பிட்டார்.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் ஆளணி மீளாய்வுக்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லை எனவும், அதனைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் எவ்வளவு விரைவாக அதனைப்பெற்றுத் தரமுடியுமோ அதனைச் செய்வதாக ஆளுநருக்கு பதிலளித்தார்.
வடக்கு ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது குறிப்பிட்டார். வடக்கின் சில மாவட்டங்களில் நிலவும் சுகாதாரத்துறை தொடர்பான நிர்வாகப் பிரச்சினைகள் பற்றியும் ஆளுநரும், சுகாதார சேவைகள் பணிப்பாளரும் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரனவும் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.