சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்து அரசியலில் வெற்றி பெற முடியாது! விஜய் குறித்து துரை வைகோ எம்பி பேச்சு!
விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு, சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது என மதிமுக எம்பி துரை வைகோ பதிலளித்திருக்கிறார்.

விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என மதிமுக எம்.பி துரை வைகோ பதிலளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மொழிப்போர் தியாகி அழகிரி நினைவு மணி மண்டபத்திற்கு திருச்சி தொகுதி எம்பியும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வந்திருந்து அழகிரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. முதலில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு இந்த தேர்தலிலும் அதே இந்தியா கூட்டணியே தொடரும் என்றும், இந்த கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் அதே ஒரு மித்த சிந்தனையில் இருப்பதாகவும், அதனால் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார்.
கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தான் கட்சியின் முதன்மைச் செயலாளராக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் இயக்கத்தின் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுகுழு கூடிதான் முடிவு எடுப்பார்கள் என்று கூறினார்.
மேலும் வரும் 22ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட இருக்கிறது. அப்பொழுது தேர்தல் வியூகம் பற்றிய திட்டங்கள் மற்றும் முடிவுகள் எடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களும் எப்படி செயல்பட வேண்டும், தேர்தல் வியூகம் எப்படி இருக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்படும். அதே சமயம் நமது கட்சியின் பலம் கூட்டணிக்கு எவ்வளவு பலத்தை கொடுக்கிறது என்பதை பொருத்தும் தான் சீட் முடிவு செய்யப்படும் என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அதிமுகவிற்கு பலவீனமாக இருக்குமா? திமுக பலவீனமாக இருக்குமா என்ற கேள்விக்கு, “சகோதரர் விஜய் உச்சபட்ச நட்சத்திரம். அவருக்கு பின்னால் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளனர். ஆனால் அது அரசியலில் எந்த அளவிற்கு பலன் தரும் என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர் முதலில் களத்திற்கு வர வேண்டும். மக்களின் பிரச்சினைக்காக போராட வேண்டும். பலமுறை களத்தை சந்தித்து அனுபவம் பெற வேண்டும். மக்கள் சார்ந்த பிரச்சினைகள், மக்களின் கோரிக்கைகளை களத்தில் நின்று அவர் எதிர்கொள்ள வேண்டும்.
அவரை நான் சாதாரணமாக எடைபோடவில்லை. இருந்தாலும் மற்ற அரசியல் கட்சிகளைப் போன்று அனுபவம் வேண்டும். இவர் அரசியலுக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. சினிமா கவர்ச்சி மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் வெற்றி பெற முடியுமா என்றால் அது முடியாது. தனது எதிரி மதவாத கட்சிகள் தான் என்கின்றார். மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற வகையில் இவர் செயல்பட வேண்டும். இப்போது வரை அவர் தனித்து தான் இருக்கிறார். இதையெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை என் வேண்டுதலாக கூட வைத்துக் கொள்ளலாம்” என்றார்.
பாஜக - அதிமுக கூட்டணி பற்றி கேட்டதற்கு, “அவர்கள் முன்பிருந்தே கூட்டணியில் தான் இருக்கிறார்கள். பல முறை தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சில நேரம் தோற்றும் உள்ளனர். ஆனால் அவர்கள் வலுவான கூட்டணி என்று கூறிக் கொள்கிறார்கள். எங்கள் கூட்டணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதனை மக்கள் ஏற்பதும் ஏற்காததும் தேர்தல் முடிவில் தான் தெரியும்” என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் உள்கட்சி விவகாரத்தை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது தவறு என்றும், அது பற்றி தான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும், ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள் கட்சி ஜனநாயகம் இருக்கிறது என்றும், அந்த கட்சிக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை, அந்த கட்சியின் மூத்தவர்கள், நிர்வாகிகள் பேசி தீர்ப்பார்கள் என்றும் கூறினார். மேலும் பிற கட்சியினர் அடுத்த கட்சியின் பிரச்சனைகளைப் பற்றி கருத்து சொல்வது முறையல்ல என்றும், அது நாகரிகமும் இல்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பட்டுக்கோட்டையில் உயிரிழந்த 10 ரூபாய் மருத்துவர் டி.ஏ.கே ரத்தனம் பிள்ளை மறைவு என்பது இந்த பகுதியின் பெரும் இழப்பு என்றும், அது போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது என்றும், இரண்டு ரூபாய் மருத்துவப் பயணத்தை துவங்கி சாகும் வரை பத்து ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்காத ஒரு மருத்துவர் இருந்தார் என்றால் அது வியப்பாக இருக்கிறது என்றும் கூறினார்.