குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்
.

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, வதந்திகளை நம்பக்கூடாது என விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக நேற்று, எதிர்க்கட்சி தலைவர் EPS, "குடியரசு தின விழாவில், டெல்லியில் ஆண்டுதோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தமிழக அலங்கார ஊர்தி, அதிமுக ஆட்சிக்காலங்களில் பல முறை பங்கேற்றது. ஆனால், திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், இந்த ஆண்டும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் அரசின் அலட்சியத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசிற்கும் என் கடுமையான கண்டனங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
குற்றசாட்டிற்கு தமிழக அரசின் பதில்
இதனையடுத்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தங்களது எக்ஸ் பக்கத்தில், "2025-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்காது என்று வதந்தி பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல்"."2025-ம் ஆண்டின் அணிவகுப்பில் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்க தேர்வு செய்யப்படுவது சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது, அனைத்து மாநிலங்களும் அனைத்து ஆண்டுகளிலும் பங்கேற்க முடியாது. 2024-ம் ஆண்டு தமிழ்நாடு ஊர்தி பங்கேற்றது"."அடுத்த 2026-ம் ஆண்டு தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்கும். எனவே, தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது என பரவிய தகவல் தவறானது" என்று விளக்கமளித்துள்ளது.