ஆளும் கட்சிக்குள் பூகம்பம்
பிரதமர் பதவியில் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில கிசு கிசுக்கள் வெளிவருகிறது.

ஆளும் கட்சியின் அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய அரசியலில் பல்வேறு கருத்துக்கள் உலாவ, பிரதமர் பதவியிலும் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில கிசு கிசுக்கள் வெளிவருகிறது.
அரசாங்கத்தின் உள்வீட்டு மோதல்களே திடீர் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்ற நிலையில், விஜித ஹேராத்தை பிரதமராக்கவும், ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் ஜே.வி.பிக.குள் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
எனினும் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார இருப்பதாகவும் ஆளும் கட்சி தகவல்கள் கூறுகின்றன.
மறுபுறம் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமடைய தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவை சிறப்பு விருந்தினராக மிலிந்த மொரகொட அழைத்திருந்தமை, ஆளும் கட்சிக்குள் மற்றுமொரு பூகம்பத்திற்கு காரணமாகியுள்ளது.
ஜே.வி.பி – ஹரிணி மோதல்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கொள்கை இணக்கமின்மை குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது.
இநத நிலைமை தற்போது ஆளும் கட்சிக்குள் பெரும் உள்வீட்டு மோதலாக மாறியுள்ளது. ஜேவிபி தனது வரலாற்றை மறந்து முன்னேற தயாராக இல்லை. ஜேவிபியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப இருந்தால் மட்டுமே அரசாங்கத்துடன் இருக்க முடியும் என்றும், இல்லையென்றால் அரசாங்கத்தில் இருக்க முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், ஜனாதிபதியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு பிறகு, உள்வீட்டு மோதல் பொதுவெளியில் பேசும் பொருளாகியது.
குறிப்பாக கடந்த காலங்களில் கொழும்பில் ஜேவிபிக்கு அதிக வாக்குகள் இல்லை. கொழும்பு நடுத்தர வர்க்கமோ, நகர்ப்புற வர்க்கமோ, உயர் வர்க்கமோ ஜேவிபிக்கு ஒருபோதும் வாக்களிக்கவில்லை.
ஆனால் திசைகாட்டி மூலம் கொழும்புக்கு வந்த ஹரினி அமரசூரிய, கொழும்பில் ஜே.வி.பியின் வாக்கு வங்கியை அதிகரிப்பதில் முக்கிய காரணமாக இருந்தார். இதனால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் கொழும்பில் திசைகாட்டி மிகப்பெரிய வெற்றியைப் பெற முடிந்தது.
எனினும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளை கருத்தில் கொண்டு, உடனடியாக அமைச்சரவை மறுசீரமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் பிரதமர் பதவியும் மாற வேண்டும் என்றும் கூறுகின்றனர். மறுபுறம் அரசாங்கத்திற்க வெளியில் சில அரசியல் மற்றும் இராஜதந்திர தொடர்புகளுடன் பிரதமர் ஹிரணி கூடுதல் ஆர்வம் காட்டுகின்றமை கூர்மையாக அவதானிக்கப்படும் விடயமாகியுள்ளது.
தூதரகங்கள் மற்றும் தாராளவாத கருத்துக்களைக் கொண்ட சக்திவாய்ந்த நாடுகள் பிரதமர் ஹரிணி மீது சிறப்பு ஆர்வம் காட்டி வருவதாகக் அண்மையில் குறிப்பிட்டிருந்Nதூம். குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அவர் மீது சிறப்பு ஆர்வம் காட்டி வருகின்றன.
மிலிந்தவின் அழைப்பு
ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை தொடர்ந்து பிரதமர் ஹரிணிக்கு, குறிப்பிட்ட அரசு சாரா அமைப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளின் அடிப்படையில் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கும் ‘பாத்ஃபைண்டர்’, அரசு சாரா அமைப்பு இந்த அழைப்பை விடுத்திருந்தது. உள்ளூர் அரசியலில் பல தசாப்தங்களாக நன்கு அறியப்பட்ட நபராகக் கருதப்படும் மிலிந்த மொரகொடவால் வழிநடத்தப்படும் அமைப்பாகவே ‘பாத்ஃபைண்டர்’ உள்ளது.
மிலிந்த மொரகொட,ஆரம்ப நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நெருங்கிய நண்பராக இருந்தார். இருப்பினும், மிலிந்தவை பொது அரசியலுக்குக் கொண்டுவந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலின் அரசாங்கத்தின் போது பல்வேறு பதவிகளை வகித்த மிலிந்த, ஒரு நல்ல அரசியல் செயல்பாட்டளர் என்றும் அறியப்படுகிறார்.
அந்த நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியில் இருந்தபோது, துணைத் தலைவர் கரு ஜெயசூர்யா உட்பட 17 மூத்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லும் அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டவர் மிலிந்த மொரகொடதான்.
அதன் பிறகு, மஹிந்தவுடனும் பின்னர் கோட்டாவுடனும் அரசியல் செய்த மிலிந்த, கோட்டாவின் கீழ் அமைச்சரவை சலுகைகளுடன் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனங்களை பெற்றார்.
சர்வதேச சமூகத்துடன் சிறந்த அரசியல் தொடர்புகளை மிலிந்த மொரகொட வைத்துள்ளார். குறிப்பாக இந்தியாவுடனும் அமெரிக்கா மற்றும் நோர்வேயுடனும் சிறந்த உறவுகளை இவர் கொண்டுள்ளார்.
இதன்படி, இந்த மிலிந்தவின் தலைமையிலான ‘பாத்ஃபைண்டர்’ அமைப்பு கடந்த வாரம் கொழும்பில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வுக்கு ‘ஐந்தாவது வங்காள விரிகுடா உரையாடல்’ என்று பெயரிடப்பட்டது. இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் பிரதமர் ஹரிணி அமரசூரியா இதில் கலந்து கொண்டிருந்தார். இது அரசாங்கத்திற்குள் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன.
புதிய ஐ.தே.க
அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையும் உள்வீட்டு முரண்பாடுகளும் நாளுக்கு நள் அதிகரிக்கையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.
இவ்வாறானதொரு நிலையில் புதிய ஐக்கிய தேசிய கட்சியை உருவாக்குவதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை சிறிகொத்தாவில் உறுதிமொழி வழங்கினர்.
இந்த நிகழ்வில் வஜிர அபேவர்தன், தலதா அத்துகோரல, அகிலவிராஜ் காரியவசம், நவீன் திசாநாயக்க மற்றும் சாகல ரத்நாயக்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ரணில், ‘ கடந்த தேர்தலில் பிரதேச சபை மற்றும் நகர சபைகளின் வாக்குகளை நான் அதிகரிக்கவில்லை. நான் அதை ஒரு குழுவிடம் ஒப்படைத்தேன்.
அவர்கள் தங்கள் பொறுப்புக்களை சிறப்பாக செய்தார்கள். கட்சியின் துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர், அதே போன்று, ஹரின் பெர்னாண்டோ, ராஜித சேனாரத்ன, மனுஷ நாணயக்கார போன்றவர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.
முடிவில் அவர்கள் வெற்றி இலக்கை அடைந்துள்ளனர். கட்சியின் நிர்வாக பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்கவே விரும்பினேன். தேர்தல் முடிவுகள் புதிய மாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த முடிவுகளின் அடிப்படையில் நாம் புதிய கட்சியை உருவாக்க வேண்டும். இந்த குழுவுக்கே அந்த பொறுப்பினையும் ஒப்படைத்துள்ளேன். புதிய முகங்களை இணைத்துக்கொள்ள வேண்டியதுள்ளது என்று சாடை மொழியில் குறிப்பிட்டார்.
‘ இனிவரும் தேர்தல்களில் வெற்றிப்பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால், இதே உத்வேகத்துடன் கட்சிக்குள் மாற்றங்களை செய்ய வேண்டும்’ என்று வஜிர அபேவர்தன் தெரிவித்தார்.
‘ முன்பு தேர்தல் நடவடிக்கைகளில் நாம் ஈடுப்படும் போது, சில பிரதேசங்களில் தொலைப்பேசிகள் இருக்க வில்லை. ஆனால் இன்று புதிய சமூகத்துடன் செயல்பட வேண்டியதுள்ளது. எனவே அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள கூடியவாறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு புதிய கட்சியை உருவாக்குவோம்’ என ரணில் கூற அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
ஐ.தே.க – புதிய ஜனநாயக முன்னணி சந்திப்பு
ஐக்கிய தேசிய கட்சிக்கும் புதிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது. இதன் போது சமகால அரசியல் விடயங்கள் குறித்து பேசப்பட்டது.
‘ அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்புக்கு சில ஊடகவியலாளர்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்து கடந்த வாரம் ஊடக அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எமது ஆட்சியில் இத்தகைய பிரச்சினைகள் வரும் போதுஈ அவற்றை சுமூகமாக பேசி தீர்மானித்ததாக’ அரசாங்க தகவல் தினைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கூறினார்.
‘ ஊடக துறைகள் குறித்து போதிய அறிவின்மையின் காரணமாகவே இத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கத்திடமே பிரச்சினைகள் உள்ளதே தவிர, ஊடகவியலாளர்களிடம் இல்லை’ என ரணில விக்கிரமசிங்க இதன் போது குறிப்பிட்டார்.
‘ ஒரு மாதத்திற்கு முன்னர் பெரும் வீரர்களாக தம்மை வெளிப்படுத்திக்கொண்ட பிமல் ரத்நாயக்க, நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஹரிணி அமரசூரிய போன்றவர்கள், தற்போது பூனைகளாக உள்ளனர். அநுர குமார திசாநாயக்கவின் வீரத்தனமும் குறைந்து விட்டுள்ளது’ என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கூறினார்.
‘புலி மற்றும் கரடி போன்ற விலங்குகள் மனிதர்களை தாக்குவது, மனிதர்கள் மீதுள்ள அச்சத்தினால் தான் என கிராமிய கதைகள் உள்ளன. அதே போன்றதொரு நிலைமை தான் இன்று அரசாங்கத்தினால் ரணிலுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
‘ தனது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு தங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் அவர்களுக்கு தங்குவதற்கு வேறு ஒரு இடத்தை அரசாங்கம் இன்னும் வழங்க வில்லை. ஆட்பதிவு தினைக்களத்தின் பழைய கட்டட தொகுதியை தருவதாக குறிப்பிட்டிருந்த போதிலும், இதுவரையில் அதனையும் வழங்க வில்லை.
ஆரம்பத்தில் பிரதான பாதுகாப்பு அதிகரியை எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி இடமாற்றினார்கள். தற்போது எஞ்சியிருப்பவர்களையும் அனுப்புகின்றனர். இதனை செய்வது எமது நண்பரே தவிர, எதிரியல்ல’ என ரணில் விக்கிரமசிங்க தெளிவுப்படுத்தினார்.
‘ அரசாங்கத்திற்கு இருப்பது பேரச்சம். ரணில் இருக்கும் வரை அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு நெருக்கடியும் அச்சமும். இருக்கும் போலித்தனத்தால் ஆட்சி பீடம் ஏறி இன்று நிர்கதியாகியுள்ளனர். மக்கள் உண்மையை உணர தொடங்கியுள்ளனர்’ என வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
மாலனி பொன்சேகா விவகாரம்
‘ ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மாலனி பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி குறித்து ஆளும் கட்சி திட்டமிட்டு போலி பிரசாரங்களை செய்தது.
ஆனால் அரசாங்கம் என்ற வகையிலும் நாட்டின் குடிமகனாகவும் தனது கடமைகளை ரணில் தவறாமல் நிறைவேற்றினார் என்பதே உண்மையாகும். இருப்பினும், நமது தேசம் இப்போது அவரை இழந்துவிட்டது.
ஏனென்றால் அத்தகைய ஒரு கலைஞர் சமூகத்தில் மீண்டும் பிறப்பது எளிதல்ல. அதனால்தான் ஒரு கட்டத்தில் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் முழு கலைத்துறையும் கௌரவிக்கப்பட்டது.
மேலும், இன்று சிலர் ஜனாதிபதி நிதியிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், ஒவ்வொருவரையும் சமமாகப் பார்க்க முடியாது. தேசிய பொக்கிஷங்களாக இருக்கும் தனிநபர்களைப் பாதுகாப்பது தேசத்தின் பொறுப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் வெறுப்பு, கோபம், பொறாமை மற்றும் பாசாங்குத்தனம் ஆகியவற்றை அரசாங்கம் மீண்டும் விதைக்கக்கூடாது’ என வஜிர அபேவர்தன கூறினார்.