அகதிகள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் அவசியமில்லை; மாறாக கொள்கையிலேயே மாற்றம் வேண்டும் - சுமந்திரன்
இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்திலிருந்து குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாறாக இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்திலிருந்து குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளியன்று தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அதில் பின்வருமாறு கூறிப்பிட்டிருந்தார்:
சட்டத்தின் ஊடாக அனுமதியளிக்கப்படாத துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிப்போருக்கு எதிராக தன்னியல்பாகப் பிரயோகிக்கப்படும் சட்டத்தின் விளைவாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போருக்குப் பின்னர் இவ்விடயம் தொடர்பில் கரிசனை கொண்ட தரப்பினர் உரியவாறு செயலாற்றியிருந்தால், இச்சட்டத்தை இலகுவாக மாற்றியமைத்திருக்கமுடியும். இதுபற்றி நான் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கலந்துரையாடினேன். அவர் இக்கொள்கையை மாற்றியமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அத்தோடு இது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல. மாறாக இது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். நானும், அமைச்சர் சந்திரசேகரும் 2007 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அம்முகாம்களில்; இருந்த 28,500 இலங்கைப் பிரஜைகளுக்கு இந்நாட்டுப் பிரஜாவுரிமையை வழங்குவதற்கான சட்டத்தை 2008ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டோம்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பதிவை மேற்கோள்காட்டி தனது 'எக்ஸ்' தளத்தில் கடந்த சனிக்கிழமை பதிவொன்றைச் செய்திருந்த சுமந்திரன், 'குறித்த நபருக்கான பயண அனுமதிப்பத்திரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டிருப்பதுடன், அது இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் அவரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்கையில் அந்நபரைக் கைதுசெய்த குடிவரவுத்திணைக்கள அதிகாரிகள், இதுபற்றி ஏன் ஆராயவில்லை. மாறாக அவரைக் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தது ஏன்?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேவேளை நேற்று திங்கட்கிழமை இதுபற்றி மற்றுமொரு பதிவைச் செய்துள்ள அவர், அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியமைப்பதாக அரசாங்கம் கூறியிருப்பதைப் பெரிதும் வரவேற்பதாகவும், இருப்பினும் இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
'ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் 'தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்' கீழ் நாடு திரும்பும் நபர்கள் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள். மாறாக அவர்கள் நாட்டுக்குள் வரவேற்கப்படுவார்கள் எனும் கொள்கைசார் அறிவுறுத்தல் மாத்திரமே அவசியமாக இருக்கின்றது' என்றும் சுமந்திரன் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.