கறுப்பு ஜூலை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
1983இல் வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கொழும்பில் பலர் கொல்லப்பட்டனர்.

கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயலாமல் அதனை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
1983இல் வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கொழும்பில் பலர் கொல்லப்பட்டனர்.
இராணுவ மற்றும் பொலிஸாரின் தலைமையில் அரச உதவிப் பின்னணியில் தமிழ்க் குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டன.
அது மறக்க முடியாத சம்பவங்கள். சிங்களவர்களிடையே இருந்த நல்லவர்கள் தமிழர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற நாளையே தமிழர்கள் அனுஷ்டிக்கின்றனர்.
எனினும், இன்னும் இதனைச் சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான நாளாக அறிவிக்க முடியவில்லை. அதேபோன்று, இதுவரையில் இன்னும் எந்த அரசும் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக்கோரவும் இல்லை.
ஜே.வி.பியும் இதில் குற்றவாளியே. கறுப்பு ஜூலையை வரலாற்றிலிருந்து மறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அதனை மறைக்க முடியாது.
ஏன் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டியேற்பட்டது என்பதைப் பாருங்கள். அதனைப் பயங்கரவாதம் என்று கூற முடியாது. அவ்வாறு நான் கூறமாட்டேன். பாதுகாப்புக்காக மக்கள் அதனைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், நீங்கள்தான் பயங்கரவாதம் போன்று செயற்பட்டீர்கள். என்றார்.