வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட ஆளுந்தரப்பு இதில் அலட்சியம் காண்பிக்கலாமா? - காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம்
அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வலிந்து காணாமலாக்கப்படல்களால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தும்கூட, இவ்விவகாரத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவாக தலா 200,000 இலட்சம் ரூபாவையை வழங்குவதற்கும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவேண்டும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் சார்பில் இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப்பிரேரணையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்கல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் செயற்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதி பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு தலா 200,000 ரூபா வீதம் வழங்குவதற்குப் போதுமானது எனினும், கடந்த 6 மாதகாலத்தில் மேற்படி இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட குறைநிரப்புப்பிரேரணை ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்னமும் 6 மாதகாலத்துக்கு மாத்திரமே செல்லுபடியாகும் பின்னணியில், அந்நிதி உரியவாறு பயன்படுத்தப்படாவிடின், அதனை மீண்டும் திறைசேரியிடமே கையளிக்கவேண்டும்.
2023 - 2024 வரையான நிதியாண்டில் இந்நோக்கத்துக்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், அந்நிதி உரியவாறு பயன்படுத்தப்படாததன் விளைவாக 200 மில்லியன் ரூபா திறைசேரியிடம் மீளக்கையளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை செயற்திறன்மிக்கவகையில் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு மாதமும் 1000 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இருப்பினும் கடந்த 6 மாதகாலத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஒரு விசாரணையைக்கூட மேற்கொள்ளவில்லை. இவ்விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான செயன்முறை தொடர்பில் நீதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஒப்புதல் அளிப்பதை அமைச்சரவை தாமதப்படுத்தியிருப்பதே இதற்குரிய பிரதான காரணமாகும்.
அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படல்கள் சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியம் அல்ல எனவும், மாறாக உள்ளகப்பொறிமுறை பலப்படுத்தப்படும் எனவும் பிரதமர் பாராளுமன்றத்துக்கும், வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அறிவித்துள்ளனர். அத்தகைய வாக்குறுதிகளுக்கு மத்தியிலும் கூட, புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதிலிருந்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தைப் பலப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறன்மிக்கவகையில் இயங்குவதற்கு சுமார் 250 ஊழியர்கள் அவசியம். ஆனால் தற்போது 49 ஊழியர்களுடனேயே அந்த அலுவலகம் இயங்கிவருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வலிந்து காணாமலாக்கப்படல்களால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாகும். அவ்வாறிருந்தும்கூட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தைப் பலப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலும், அவர்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதிலும் அரசாங்கம் அக்கறையீனமாக செயற்பட்டுவருகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவாக தலா 200,000 இலட்சம் ரூபாவையை வழங்குவதற்கும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அமைச்சரவை அனுமதி அளிக்கவேண்டும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் எதிர்வரும் 6 மாதகாலத்தில் 5000 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்யவேண்டும். இவற்றுக்கான நிதி உரிய காலத்தில் விடுவிக்கப்படவேண்டும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் இயங்கைக்கு அவசியமான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.