அல்வாய் படுகொலை நிகழ்வின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
சிறிலங்கா சிங்கள மேற்கொள்ளப்பட்ட’லிபரேசன் ஒபரேசன்’ எனும் இராணுவ நடவடிக்கை, 1987 மே 26 முதல் 31 வரை இடம்பெற்ற அல்வாய் படுகொலை!

வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட’லிபரேசன் ஒபரேசன்’ எனும் இராணுவ நடவடிக்கையின் போது 1987 மே 26 முதல் 31 வரை இடம்பெற்ற அல்வாய் படுகொலை நிகழ்வின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி – மாலைசந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளது.
‘லிபரேசன் ஒபரேசன்’ இராணுவ நடவடிக்கையின் போது ஆலயங்கள், பாடசாலைகளில் சென்று பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இராணுவத்தினரால் உலங்குவானூர்தி மூலம் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டன.
இதையடுத்து வடமராட்சி பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் ஆலய சூழலிலும் அடைக்கலமடைந்திருந்த நிலையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர்.
அத்துடன் வடமராட்சி பகுதி எங்கும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு,எறிகணைத் தாக்குதல், கையெறி குண்டுத் தாக்குதல்களில் சிக்கி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
மைக்கேல் விளையாட்டு கழகம், மைக்கேல் நேசக்கரம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மைக்கேல் விளையாட்டுக்கழகத்ரினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கர வண்டி, உலருணவுப் பொருட்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.