யாழ் மாநகர முதல்வர் தெரிவு: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பெருகும் ஆதரவு..!
தமிழ் தேசிய பேரவை-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து..!

யாழ் மாநகர சபையின் ஆட்சியினை கைப்பற்றுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தம் இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு 12 ஆசனங்களும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன.
அதேவேளை இலங்கை தமிழரசு கட்சிக்கு 13 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
இந்நிலையில் யாழ் மாநகர மேயர் தெரிவுக்கான ஆதரவு தொடர்பில் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ் மாநகர சபையில் மொத்தமாக 16 ஆசனங்களுடன் மேயர் தெரிவில் முன்னிலை வகிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை தமிழரசு கட்சியினை பொறுத்தவரையில் மேயர் தெரிவின் போது ஈ.பி.டி.பியினர் ஆதரவளிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இறுதி நேரத்தில் யாழ் மாநகர மேயர் தெரிவில் எதுவும் நடக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ் மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட சபைகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசிய பேரவை-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து..!
தமிழ் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு யாழிலுள்ள பிரபல தனியார் விடுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றது.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் பெற்றுக் கொண்ட ஆசனங்களை கொண்டு சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்றிரவு இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்தே இன்றையதினம் கொள்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.