இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடை நீக்கப்படவுள்ளது!
யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர்.

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர். அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.
அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆனந்த விஜயபால கூறினார். இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அனுமதி பெறப்படவுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த மூன்று வயது குழந்தை உட்பட மூவர், தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு திரும்பியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 24 வயது இளம் தம்பதியினர் மற்றும் மூன்றரை வயது குழந்தை எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.