பத்துக்கு மேற்பட்ட மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை துரிதப்படுத்த நடவடிக்கைக!

அரியாலை - செம்மணி சித்துப்பாத்தி மயான பகுதியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணி புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.
அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் புதன்கிழமை (4) வரை பத்துக்கு மேற்பட்ட மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஐந்து வரையான மண்டையோட்டு பாகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த அகழ்வுப் பணிகள் சர்வதேச மேற்பார்வையுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாவற்குழி யாழ் வளைவு பகுதியில் இன்று காலை 10 மணியளவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சித்துபாத்தி மாயானத்தில் மனித உடலங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை வழங்கப்படவுள்ளது.
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை துரிதப்படுத்த நடவடிக்கைக!
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார எம்.பி முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் முன்னெடுக்கப்படும்.
இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கின்றேன் என்றார்.