ஏர் இந்தியா விபத்து: 265 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி நேரில் ஆய்வு! -
விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்தில், போயிங் டிரீம்லைனர் 787 ரக, ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 12 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பகல் 1:39 மணிக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பயணம் செய்த 242 பேரில் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். விமானத்தில் பயணம் செய்த 241 பேர், மருத்துவ மாணவர் விடுதி சிக்கிய நபர்கள் என மொத்தம் 265 பேர் இதுவரை இந்த விபத்தில் உயிரிழந்ததாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
ஏர் இந்தியா விமான விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்து தொடர்பாக குஜராத் அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய ஜல் சக்தி அமைச்சரும், குஜராத் பாஜக தலைவருமான சி.ஆர்.பாட்டீல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மரணத்தை வென்ற ரமேஷ் விஷ்வாஸ்!
அகமதாபாத் விமான விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை நேரில் சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். மேலும், இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்றுவரும் ரமேஷ் விஷ்வாஸ் குமாரையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். விபத்து குறித்து ரமேஷிடம் விசாரித்த அவர், உடல்நலனை பார்த்துகொள்ளும்படி கூறினார்.
அடையாளம் காணப்படும் உடல்கள்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது. விமானம் வெடித்து சிதறியதில் உருகுலைந்த உடல்களில் இருந்து ரத்த மாதிரிகள் எடுத்து டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பவுள்ளதாக குஜராத் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
'அந்த காட்சியில் இருந்து மீளவே முடியல...' விமான விபத்தை அச்சத்துடன் விவரிக்கும் பொதுமக்கள்!அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் வசிப்பவர்கள் விபத்து நடந்த நேரத்தில் கண்ட காட்சிகளை அதிர்ச்சியுடன் விவரித்துள்ளனர்.
அடர்ந்த மரங்களுடன் பச்சை பசேல் என இருந்த பகுதி விமான விபத்துக்கு பிறகு கருமை நிறைந்து காட்சி அளிக்கிறது. மயில்களும், குரங்குகளும் எந்த நேரம் உலாவிக் கொண்டிருந்த இடத்தில் பறவைகள் சத்தம் கூட கேட்கவில்லை என கூறும் மேகானி நகர் பகுதியினர் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர்.
குஜராத்தின் மேகானி நகரில் நேற்று (ஜூன்.12) நிகழ்ந்த ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம் லைனர் விமான விபத்தில் 291 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்துக்குள் மோதி நுழைந்த விமானம் கட்டடத்தின் பின் பகுதியை உடைத்து வெளியே வந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலுடன் விபத்துக்குள்ளான விமானம் வெடித்து சிதறியதில் அந்த இடம் தீ காடாக மாறியது. விமானம் அசுர வேகத்தில் கட்டடத்தில் மோதியது ஒரு கோரம் என்றால், விமானத்தின் முக்கால்வாசி பகுதி பயணிகளுடன் தீயால் சூழப்பட்ட நொடிகளை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பார்க்கும் போதே குலை நடுங்குகிறது என்றால், அதனை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு எப்படி இருக்கும்?.
விபத்து நடந்த இடத்தை ஈடிவி பாரத் குழு பார்வையிட்ட போது, மேகானி நகர் பகுதி மக்கள் தாங்கள் கண்டதை அதிர்ச்சியுடன் விவரித்தனர். விபத்து நடந்த மருத்துவக் கல்லூரி விடுதிக்கு பக்கத்துக்கு காம்பவுண்டில் வசிக்கும் பெண்மணி ரேவாபென் பதானி கூறுகையில், '' நானும் எனது மகனும் மதியம் சாப்பிட்டு விட்டு வீட்டில் அமர்ந்து இருந்தோம். அப்போது எங்களது காதுகளை வெடிக்கச் செய்யும் வகையில் பயங்கர சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது? என்பதை பார்க்க பதறியபடி வெளியே வந்து பார்த்தோம்.
சில மீட்டர் தொலைவில் இருந்த அந்த விடுதி கட்டடத்துக்குள் விமானம் மோதி தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதில் இருந்து வந்த கரும் புகையால் இந்த பகுதி இருளால் சூழ்ந்தது. சிறிது நேரம் கழித்து நிறைய பேர் இங்கு கூடினர். நாங்கள் கண்ட காட்சியில் இருந்து இன்னமும் எங்களால் மீள முடியவில்லை'' என தெரிவித்தார்.
ரேவாபென் பதானியின் மகன் தீபக் பதானி கூறுகையில், ''பலத்த சத்தத்தைக் கேட்டதுமே அரண்டு போய் விட்டோம். விபத்து நடந்த இடத்தைப் பார்க்க பலர் இங்கு வந்திருந்தனர். குழந்தைகளை அங்கிருந்து வெளியேற்றி திறந்த வெளிக்கு அழைத்துச் சென்றோம். விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் தீயணைப்பு வீரர்களும் வந்தனர். விபத்து நடந்த ஒரு நொடியில் அந்த இடமே மாறிப் போனது. சுற்றிலும் பச்சையாக இருந்த அடர்ந்த மரங்கள் கருகி எலும்புக்கூடுகளைப் போல காட்சி அளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் கருப்பு கருப்பாக எச்சங்கள் சிதறி கிடக்கின்றன. எந்நேரமும் இந்த பகுதியில் குரங்குகளும், மயில்களும் வந்து செல்லும். ஆனால், தற்போது ஒரு விலங்கை கூட பார்க்க முடியவில்லை'' என்றார்.
புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சொந்த வீடு கட்டி வாழ வேண்டும்.. அரசு வேலையில் சேர வேண்டும் ஆகிய கனவுகள் கைக்கூடி வந்த நேரத்தில், லட்சியத்தோடு பயணித்த ரஞ்சிதாவை மரணம் இழுத்து சென்றுவிட்டது. அகமதாபாத் விமான விபத்து ஆரா துயரம் என்றால், கேரள பெண்ணின் மரண கதை துயரத்தின் உச்சம்.
பத்தனம்திட்டாவின் திருவல்லா புல்லாட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (38). இவருக்கு திருமணமாகி 10 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகள் ஓமன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதாவுக்கு இங்கிலாந்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் வேலை கிடைத்தது. கேரளாவில் சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்ற கனவோடு கடந்த ஓராண்டுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்று வேலையில் சேர்ந்தார். தற்போது ஊரில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருவதால் அதனை கவனிக்க விடுமுறை எடுத்து கேரளாவுக்கு திரும்பினார். இந்த சூழலில், ரஞ்சிதாவுக்கு கேரளா சுகாதார துறையில் செவிலியர் வேலையும் கிடைத்தது.
இரு வேறு ஆசைகள் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால் ரஞ்சிதாவும், அவரது குடும்பமும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அரசு வேலையில் சேர தயாரான ரஞ்சிதா இங்கிலாந்துக்கு சென்று வேலை ஒப்பந்தத்தை முறைப்படி முடித்து கேரளா திரும்ப இருந்தார். இதற்கான நேற்று கொச்சியில் இருந்து ரயில் மூலம் அகமதாபாத் வந்த ரஞ்சிதா லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். பிற்பகல் 1.17 மணிக்கு புறப்பட அந்த விமானம் 1.38 மணியளவில் 825 அடி உயரத்தை எட்டிய போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில் 241 பேர் உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். இது தவிர விமானம் விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவக்கல்லூரி கட்டடத்தில் இருந்த 50 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பயணிகளில் ரஞ்சிதாவும் ஒருவர். விமான விபத்துக்கு பிறகு ரஞ்சிதாவின் மரணம் உறுதி செய்யப்பட்டு அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தாய் இன்று லண்டனுக்கு சென்று திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நம்பி பள்ளிக்குச் சென்றிருந்த இரு பிள்ளைகளையும் உறவினர்கள் சென்று வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் ரஞ்சிதாவின் மரணத்தை தெரியப்படுத்தியுள்ளனர். அதை கேட்ட குழந்தைகள் கதறி அழுதனர். இதனால், செவிலியரின் இல்லம் அமைந்திருந்த திருவல்லா புல்லாட் பகுதியே சோகத்தில் மூழ்கியது. வீட்டு வேலை முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் லண்டன் சென்று திரும்பியதும் மீதி வேலைகளை விரைவாக முடித்திட எண்ணியிருந்த ரஞ்சிதாவை மரணம் இழுத்து சென்றுவிட்டது. சொந்த வீடு கனவு இன்னும் சில நாட்களில் நிறைவேற இருந்த நிலையில் அந்த புது வீட்டுக்கு ரஞ்சிதாவின் உடல் மட்டுமே வந்து சேர போகிறது.