நமசிவாயா' - பக்தி பாடல் வெளியிட்ட இளையராஜா பேரன் 'யத்தீஸ்வர் ராஜா'!
இந்த பாடலை உருவாக்குவதற்கு எனது தந்தை கார்த்திக் ராஜா உறுதுணையாக இருந்து பல அறிவுரைகளை வழங்கினார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பேரனும், கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஸ்வர் ராஜா எழுதி இசை அமைத்து பாடியுள்ள 'நமசிவாயா' என்ற பக்தி பாடலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் இன்று வெளியிட்டார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா. இவரும், இசையமைப்பாளராக உள்ளார். இவரது மூத்த மகன் யத்தீஸ்வர் ராஜா. இவர் இசை துறையில் கவனம் செலுத்தி வருகிறார். திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாரை போற்றும் விதமாக 'நமசிவாயா' என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் யத்தீஸ்வர் ராஜா இன்று (ஜூன் 8) பாடி வெளியிட்டு உள்ளார். இந்நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, அவரது மனைவி ராஜ்வி, இளைய மகன் ஜெய்தீஸ்வர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து யத்தீஸ்வர் ராஜா கூறும்போது, ''தற்போது விஸ்காம் படிப்பை முடித்துள்ளேன். இசை துறையில் மேற்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளேன். முன்னதாக நானே இயற்றி நானே இசையமைத்து 'ஆட்டோ டியூன்' என்று சொல்லக்கூடிய இசையமைப்பில் 'நமசிவாயா' என்ற சிவன் பாடலை இன்று வெளியிட்டுள்ளேன்.
இந்த பாடலை உருவாக்குவதற்கு எனது தந்தை கார்த்திக் ராஜா உறுதுணையாக இருந்து பல அறிவுரைகளை வழங்கினார். அடுத்து டியூஷன் என சொல்லக்கூடிய பல்வேறு இசை கலவைகள் கொண்டு இசையமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.
குறிப்பாக மேற்கத்திய பாணி இசையில் அதிக நாட்டம் உள்ளது. இதையடுத்து ஆல்பம் மற்றும் திரை இசையில் வாய்ப்புகள் என்று அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட உள்ளேன்." என்று யத்தீஸ்வர் ராஜா தெரிவித்தார்.