கீழடி அகழாய்வு அறிக்கையில் ''அரசியல் சடுகுடு?
கீழடியில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய செங்கல் கட்டுமானம் தொல்லியல் ஆய்வுலகில் பெருத்த அதிர்வினை ஏற்படுத்தியது.

கீழடியின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடாத நிலையில் திடீரென அறிக்கையை திருத்தி எழுத உத்தரவு பிறப்பித்திருப்பது, தொல்லியல் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தை தேர்வு செய்வதற்கு முன்பு வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் வருஷ நாட்டிலிருந்து கடலில் கலக்கும் ராமநாதபுரம் மாவட்டம் வரை ஆற்றின் இருபுறமும் சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ள 100க்கும் மேற்பட்ட பல தொன்மையான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு கீழடியை தேர்வு செய்தது.
இந்த இடம் சிலைமான் வைகையாற்றிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் மதுரை மாவட்ட கிழக்கு எல்லையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பொதுவாக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகள் அனைத்தும் பொதுமக்களால் அவ்வளவாக கவனம் பெறுவதில்லை. ஆனால் மாறாக கீழடி அகழாய்வு நடைபெறும் காலங்களில் அப்பகுதி மிகப்பெரிய சுற்றுலா தலம் போல் மாறியது. காரணம் அகழாய்வு நடைபெறும் காலத்தில் பொதுமக்களுக்கு தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தி தொடர்ந்து அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு விளக்கி வந்தது.
இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு கீழடி அகழாய்வு தளம் பெரும் வீச்சில் மக்களிடையே சென்றது. குறிப்பாக 2 ஆம் கட்ட அகழாய்வின்போது கீழடியில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய செங்கல் கட்டுமானம் தொல்லியல் ஆய்வுலகில் பெருத்த அதிர்வினை ஏற்படுத்தியது. இதனை வைத்துதான் கீழடியில் நிலவியது நகர நாகரிகம் எனவும், இங்கு பெரிய தொழில் நகரம் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் ஆய்வாளர்கள் வந்தனர்.
அதேபோன்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் பானையோடுகளில் கிடைத்த தமிழி எழுத்து பொறிப்புகள் என சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்து வரலாறு இப்பகுதி மக்களுக்கு இருந்தது என்ற உண்மையை உணர்த்தின.
இந்த நிலையில் தான், கீழடி அகழாய்வு களத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணா அதிரடியாக அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஏறக்குறைய கீழடி அகழாய்வினை முடிவுக்கு கொண்டு வந்தது இந்திய தொல்லியல் துறை.
தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. அதற்கு பிறகு 3 ஆம் கட்டமாக இந்திய தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள ஸ்ரீ ராமன் என்பவரை தொல்லியல் கண்காணிப்பாளராக நியமனம் செய்தது. 3 ஆம் கட்ட அகழாய்வு நிறைவுறும் தருவாயில் ஸ்ரீராமன் கீழடியில் மேற்கொண்டு அகழாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும், கிடைத்தப் பொருட்களே மீண்டும் கிடைப்பதாக கூறி ஆய்வினை நிறைவு செய்தார்.
அதன் பிறகு தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கீழடியில் தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளும் என்று அறிவித்தார். அதன்படி 4 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி தற்போது 10 ஆம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தொல்லியல் ஆய்வுலகில் இந்த ஆய்வறிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவியது. அசாமை தொடர்ந்து கோவா பிறகு மறுபடியும் சென்னை சர்க்கிளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.
இதில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். அதுமட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கையை 9 மாதங்களில் வெளியிடுவோம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கீழடி தொல்லியல் பொருட்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை உறுதி அளித்திருந்தது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கீழடி குறித்து இந்திய தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்று கேட்டு கடிதமும் எழுதப்பட்டது. அதற்கு இதுவரை எந்த பதிலும் ஏஎஸ்ஐ தரப்பில் தரப்படவில்லை.
இந்நிலையில் கீழடி அறிக்கையை சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், 'தமிழ்நாட்டின் தொன்மைக்கும் கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றும் பாஜக அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.
தமிழர்களின் வரலாற்று தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தப்பட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தப்பட்டது. அதனை மறைக்க அவர்களால் ஒருபோதும் முடியாது' என அதில் கண்டித்துள்ளதுடன் 'கீழடி தமிழர்களின் தாய்மடி' என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து புதுடெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பணியாற்றி வரும் அமர்நாத் ராமகிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முயன்றோம். முடியவில்லை.
இதுதொடர்பாக ஏஎஸ்ஐ-யில் பணியாற்றிய மூத்த தொல்லியல் அறிஞர்களுடன் பேசியபோது, 'வருகிற மே 27 முதல் 29 வரை ஊட்டியில் இந்திய நாடாளுமன்ற உறுதிமொழிக்குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து தாங்கள் அளித்த உறுதிமொழிக்கு பதில் கூறியாக வேண்டும் என்ற நிலையில் தற்போது அறிக்கையை திருத்தி அனுப்ப கோரி அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அறிவியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளை கொண்டுதான் அமர்நாத் அறிக்கையை தயாரித்துள்ளார். இதில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதில் தேவையற்ற வகையில் அரசியல் செய்வது வேதனைக்குரியது. இதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணா தரப்பில் என்ன மாதிரியான பதில் அளிக்கப்படவுள்ளது என்பதை பொறுத்துதான் அடுத்தகட்டமாக நாம் எதுவும் சொல்ல முடியும்.'' என்றனர்.
10 ஆண்டுகளை கடந்த பின்னரும்கூட தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே உள்ள கீழடி அகழாய்வும் அதன் அறிக்கையும் மீண்டும் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.