ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசன பங்கீட்டில் அதிருப்தி- இராதாகிருஸ்ணன்!
,

ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் போது பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும், தனித்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்தும் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட இடங்களில் அதிக உறுப்பினர்களை பெற்றுக் கொண்டது.
ஏனைய இடங்களிலும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் இதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்கு போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கு பங்களிப்பை செய்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் மாத்திரமே வட்டாரத்தை வெற்றி கொண்டார்.
இவ்வாறான ஒரு நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி போன்ஸ் ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் போது பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களின் நானும் ஒருவன். எனவே இது தொடர்பாக எமது கட்யிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனை முறையாக பங்கீடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தவறும் பட்சத்தில் கட்சி பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.