வலிசுமந்த மாதத்தில் முகமூடி கழட்டப்பட்டுஅம்பலமான தோழர்கள்!
பதவிக்கு வந்து முதலிரண்டு மாதத்திலேயே தமிழினத்தின் நீதிகோரல் போரட் டத்தினை முழுமையாக நிராகரித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது.
‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் தாராளமாகவே மீறப்பட்டு முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 16வருடங்களாக பேரவலத்துக்கான நீதி கோரிய போராட்டமும் இனவிடுதலைக்கான பயணத்தில் பின்னிப்பிணை ந்து தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது.
தமிழின விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தகாலம் முதல், தாயகக் கோட்பாட்டிற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆட்சியிலிருந்த சிங்கள, பௌத்த மையவாத அரசாங்கங்கள் ஆட்சியில் ஆரம்பத்தில் இசைவதும், அரியாசனத்தில் அமர்ந்த பின்னர் ஏமாற்றுக்கதைகளைக் கூறுவதும், நேரடியாகவே மறுதலிப்பதும் தொடர்ந்தது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் னர், தமிழின அபிலாசைகளை நிராகரித்தது மட்டுமன்றி, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலையும் ஒருங்கே நிராகரிக்கும் போக்கே நீடிப்பதோடு மட்டுமன்றி, மனித உரிமை மீறல்கள் நடைபெறவே இல்லையென்று முழுமையாக நிராகரிக்கும் தீவிரமான போக்கும் காணப்பட்டது.
இந்நிலையில், சிங்கள, பௌத்த தேசிய மையவாத அரசியல் கட்சிகளின் தேசிய அரசியல் ஆதிக்கம் கடந்த ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளைப் புரிந்து பின்னரான காலத்தில் சிங்கள, பௌத்த மையவாத ஆட்சியாளர்களுக்கு முண்டு அதன்பின்னர் தாங்கள் தனித்துவமானவர்கள் இடதுசாரித்து கொள்கைவாதிகள் என்று பிரகடனப்படுத்திச் செயற்பட்ட ‘ஜே.வி.பி.’ தேசிய மக்கள் சக்தி என்ற பரிநாமத்துடன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தது.
ஜே.வி.பி.ஆரம்பிக்கப்பட்டு ஆறுதசாப்த போராட்டத்தின் பின்னர் தான் அத்தரப்பினருக்கு மக்கள் ஆணை கிடைத்தது. மக்கள் ஆணையைப் பெறும் வரையில், சகோதரத்துவம், சமத்துவம், மனிதாபிமானம், உள்ளிட்ட சொல்லாடல்களை கவர்ச்சிகரமாக வெளிப்படுத்தியது ஜே.வி.பி. ‘அரகலய’ மக்கள் எழுச்சியின் பின்னர் தேசிய மக்கள் சக்தி என்ற தோற்றப்பாட்டில் நாடாளவிய ரீதியில் உள்ள பல்லின மக்களையும் ஆரத்தழுவும் அளவுக்கு அத்தரப்பினர் நடந்து கொண்டபோதும் பதவிக்கு வந்து முதலிரண்டு மாதத்திலேயே தமிழினத்தின் நீதிகோரல் போரட் டத்தினை முழுமையாக நிராகரித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 59ஆவது மனித உரிமைகள் பேர வையில் வாய்மூலமாக வலியுறுத்தப்பட்ட இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்களை உடனடியாகவே நிராகரித்தார் ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க.
அத்தோடு நின்றுவிடாது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை, ஐ.நாவின் அனைத்து பரிந்துரைகள், குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதோடு தேசிய பொறிமுறையில் உள்நாட்டில் விடயங்கள் கையாளப்படும் என்று தீர்மானம் எடுத்து அது வெளிவிவகார அமைச்சின் ஊடாக பகிரங்கமாக சர்வதேசத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், தமிழினப் படுகொலை நினைவகம் கனடாவின் பிரம்டன் மாநகரில் மேயர் பற்ரிக் பிரவுனின் ஒத்துழைப்பு டன் தற்போது நிறுவப்பட்டு கடந்த 10ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழினம் தன்நிலத்தை இழந்து, மாற்றான் தேசத்தில் மாடாய் உழைத்து தனது நினைவுகளை ஆற்றுப்படுத்துவதற்காக நினைவகத்தை திறந்து மன நிம்மதி அடைந்திருக்கிறது. ஆனால், ஆட்சியில் உள்ள ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கமோ, அந்த நினைவகம், இலங்கையில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக இருக்கின்றது என்று கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷை அழைத்து கடுந்தொனியில் சாடுமளவிற்கே நிலைமைகள் காணப்படுகின்றன. இந்தச் செயற்பாடானது, தமிழினத்தின் வலிகளை நாட்டுக்கு வெளியில் கூட வெளிப்படுத்துவதற்கு விரும்பவில்லை என்ற செய்தியை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றது.
அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிங்கள,பௌத்த மையவாத தேசிய கட்சி களை மையப்படுத்திய அரசுகளை விடவும் ஒருபடி மேலேயே ஆட்சியில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் பேசிய இடதுசாரித்துவ தோழ மையாளர்கள் இருக்கின்றார்கள் என்பதும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடைமைகளை, உறவுகளை கண்ணுக்கு முன்னால் இழந்த உறவுகள் தங்களது வலிகளை வடுக்களாகச் சுமந்துகொண்டு எஞ்சிய தமது வாழ்க்கை காலத்தில் நீதிக்காக குரல்கொடுத்து எதிர்பார்ப்புடன் இருக்கையில் அந்த எதிர் பார்ப்புக்கள் அனைத்தும் கானல் நீராகவே போகும் என்பதை ஜே.வி.பி.தலைமையிலான அரசாங்கத்தினர் ஆட்சிப்பீடமேறி ஆறுமாத காலத்துக்குள்ளேயே வெளிப்படுத்தி விட்டனர்.
ஆக, பொறுப்புக்கூறல் என்பது அநுரவும் அவரது தோழர்களாலும் ஒருபோதும் செய்யப் படாதவொரு விடயமாகவே இருக்கும் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண் டியது தவிர்க்க இயலாதவொன்றாகிறது.
நிலைமைகள் இப்படியிருக்க, கடந்த மே 14ஆம் திகதியன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஜே.வி.பி.யின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்சியின் தலைவர் என்ற வகையில் உரையொன்றை ஆற்றினார்.
அந்த உரையானது, பொறுப்புக்கூறலை நிராகரித்து, அரசியல் உரிமைகளை ஏற்க மறுக் கின்ற ஜே.வி.பியின் அடிப்படை ஜனநாயக மறுப்பை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆம், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர் தல் முடிவுகள் ஆளும் கட்சியாக இருக்கும் ஜே.வி.பிக்கு பலத்த அடியை வழங்கியிருக்கின்றது. அந்தப் பின்னணியில் அநுரகுமார வெளிப் படுத்தியிருக்கும் கருத்துக்கள் ஜனநாயக அடிப் படைகளை பெயர்த்திருக்கின்றன.
ஜனநாயகவாதிகள் என்று தங்களை வெளிப்படுத்தி வந்த அநுரவினதும் தோழர்
களினதும் உண்மையான முகத்தை வெளிப் படுத்தியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்ற சாயம் வெளுத்திருக்கிறது. அநுரகுமார தனது உரையில் என்னி டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது. சட்டத்தை மாற்றுவதன் மூலம் எதையும் செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
ஏன் இவ்வாறு கூறினார் என்று பார்க்கின்ற போது, 339 உள்ளுராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெற் றிருப்பது, 152 சபைகளில் மாத்திரமே. அங்கு ஆட்சி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. முதல் நாளிலேயே அவர்களால் ஆட்சியமைக்க முடியும். ஆனால் 115 உள்ளுராட்சி சபைகளில் தொங்கு நிலை காணப்படுகிறது.
தொங்கு நிலையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. அதற்கான பேச்சுக்கள் நடைபெறுகின்றன. இதில் கொழும்பு மாநகர சபை பிரதானமானது.
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்டவற் றில் இரண்டாவது இடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அங்கும் சுயேச்சைக்குழு அங்கத்தவர்களை வளைத்துப்போட்டு ஆட்சி அமைக்கவே முயற்சிக் கிறது.
அதுமட்டுமன்றி, வடக்கு,கிழக்கில் தமிழர் கள் செறிவாகவுள்ள ஏதாவது ஒரு சபையில் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த பின்னணியில் தான், எதிரணிகளை அநுரகுமார எச்சரிக்கும் வகையில் தனது உரையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். இது ஜனநாயக முறைமைக்குள் பிறள்வானதொரு அரசியல் செயற்பாடாகும்.
தேசிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில், தாங்கள் கூடுதலாக ஆசனங்களை பெற்ற 267 உள்ளுராட்சி சபைகளிலும் தங்களுக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்பது தான் வாதமாக இருக்கின்றது.
அவ்வாறான இடங்களில் தாங்கள் ஆட்சி அமைப்பதை வேறு தரப்புகள் தடுக்கக் கூடாது – குழப்பக் கூடாது என்று எதிர்பார்க்கிறது. அதனை வெளிப்படையாகவும் கூறுகின்றது. ஆனால் அந்தத் தொனி அதிகாரத்தின் அடிப்படையிலானது.
உலகில் உள்ள ஜனநாயக வழக்கத்தில் அவ்வாறானதொரு போக்கு எங்குமில்லை. எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக ஆட்சி அமைக்கின்ற வழக்கம், எல்லா நாடுகளிலும் உள்ளது. அதிக ஆசனங்களை பெற்ற கட்சிக்கு மாத்திரமே மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்று அர்த்தம் கற்பிக்க முடியாது. அதிக வாக்குகளை பெற்று விட்டதால், அல்லது அதிக ஆசனங்களைப் பெற்று விட்டதால், தேசிய மக்கள் சக்தி தான் மக்கள் ஆணை பெற்ற கட்சி என்று கருத முடியாது.
ஏனைய கட்சிகளுக்கும் வாக்குகள் அளிக் கப்பட்டிருக்கின்றன. அந்த கட்சிகளும் உறுப் பினர்களை பெற்றிருக்கின்றன. ஆனால், அவற்றை மக்கள் ஆணையில்லாத கட்சிகளாக அடை யாளப்படுத்த முனைகின்றனர் அநுரவும் அவரது சகாக்களும். பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லா அதிகாரமும் தன்னிடம் இருக்கிறது என்று அப்போது கூறியிருந்தார்.
இப்போது அநுரகுமார திசாநாயக்க உள்ளு ராட்சி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை, எதிர்க்கட்சிகள் பறிக்கின்ற நிலை ஏற்பட்டால், தன்னிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, அதை கொண்டு சட்டத்தை மாற்றுவேன். நிறைவேற்று அதிகாரமும் தனக்கு துணையாகவுள்ளது என்று எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, வடக்கில் தமிழ்க் கட்சிக ளுக்கே மக்களாணை வழங்கப் பட்டுள்ளது என்பதை ஏற்க மறுக்கிறார் அநுர. தங்களுக்கு வடக்கில், இரண்டாவது அதிக வாக்குகள் கிடைத்திருப்பதால், மக்கள் தங்களை நிராகரிக்கவில்லை என்றும் கணித பெறுமானங் களை ஒப்பிட்டு பார்க்காது கருத்துக்களை வெளிப் படுத்துகிறார். அவரது வெளிப்படுத்தலும், தர்க்கமும் சிறுபிள்ளைத் தனமானது. ஆதிகார மோகத்தின் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே கொள்ள வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் 4,503,930 இலட்சம் வாக்குகள் தான் கிடைத்திருக்கின்றன. அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 43.26 சதவீதம் மாத்திரமே.
அப்படியானால் எஞ்சிய 57 சதவீத வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கே அளிக்கப்பட்டி ருக்கின்றன. அதனடிப்படையில் பார்க்கின்றபோது பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கியிருக்கவில்லை. அவர்கள் அந்த கட்சியை நிராகரித்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தங்களுக்கு மாத்தி ரமே மக்கள் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது என்று அநுரகுமரவால் எவ்வாறு உரிமை கோர முடியும்? அடிப்படைகளற்ற நிலையில் அவரது தர்க்கமானது வெறுமனே அதிகாரத்தை மையப்படுத்தியது.
அந்த அதிகாரத்துக்காக, தன்னிடமுள்ள நிறைவேற்று அதிகாரத்தையும், பாராளுமன்ற பெரும்பான்மை அதிகாரத்தையும் பயன்படுத்து வதற்கு துணிவது அதிகார மோகத்தின் அதியுச்சம். ஆகவே, அநுரவும் அவரது சகோதரர்களும் இப் போது கிராமிய அதிகாரத்தையும் தமதாக்கி ஒட்டுமொத்த அதிகார கட்டமைப்பையும் தமக் குள் வைத்திருக்கவே முனைகின்றனர்.
தனிக்கட்சியாக, அதிகாரக்குவிப்பைச் செய்யவே விளைகின்றனர். அதற்காக ஜனநாக அடிப்படைகளை மறுதலிக்கின்றனர். பகிரங்க மாகவே மிரட்டுகின்றனர், அச்சுறுத்துகின்றனர்.இவையெல்லாம் அவர்களின் சுயத்தை அம்பலப் படுத்தி நிற்கிறது. இதற்கு மேல் அவர்களிடத்தில் எதனை எதிர்பார்க்க முடியும்?
விதுரன்