போனஸ் பாதியாகக் குறைக்கப்படுகிறது, தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச வங்கி ஊழியர்கள்
ஜனாதிபதியின் கீழ் உள்ள ஓர் அமைச்சினால் தமது ஊக்கக் கொடுப்பனவை பாதியாகக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி

ஜனாதிபதியின் கீழ் உள்ள ஓர் அமைச்சினால் தமது ஊக்கக் கொடுப்பனவை பாதியாகக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி காரணமாக நாட்டின் பிரதானமான அரச வங்கியொன்றின் பணிக்குழாம் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
2024ஆம் ஆண்டு இலங்கை வங்கி ஈட்டிய 106 பில்லியன் ரூபாய் சாதனை இலாபத்துக்கு அமைவாக அதன் பணிப்பாளர் சபை தீர்மானித்த 06 மாதத்துக்கான ஊழியர் ஊக்கக் கொடுப்பனவை ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சு 03 மாதத்துக்கு வரையறுத்ததன் காரணமாக அரசின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட இலங்கை வங்கியின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதற்கமைய இலங்கை வங்கியின் ஊழியர்கள் கடந்த மே 22 ஆம் திகதி பி.ப. 3.45 மணிக்கு அலுவலகத்திலிருந்து வெளியேறியதோடு, மே 29 ஆம் திகதி அரைநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மே 28 ஆம் திகதி நாடு பூராகவும் தெரிவுசெய்யப்பட்ட 22 நகரங்களில் மதிய நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதோடு, தொடர்ந்தும் நடைபெறும் ஒத்துழையாமை மற்றும் தளர்வான ஆடை அணிந்து பணிக்கு வருதல் ஆகிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தற்போது இலங்கை வங்கியில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2025 மே 27 ஆம் திகதி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் தாம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு காரணமாக அமைந்தது பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்ட 06 மாத ஊக்கக்கொடுப்பனவை வழங்குவதற்கு பிரதி நிதியமைச்சர்களும் உடன்பட்டிருந்த நிலையில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட குறைப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கப்பட்ட 2025.05.01 ஆம் திகதி பிரதி நிதியமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை வங்கியின் 2024 ஆம் ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட ஊக்கக் கொடுப்பனவு தொடர்பில் உருவாகியுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு இலங்கை வங்கியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கட்டமைப்பு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.”
இது தொடர்பில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்திடம் வினவியபோது, 2000 ஆம் ஆண்டு அரச வங்கிகளின் இலாபம் வீழ்ச்சியடைந்தபோது இலாபத்தை அதிகரிப்பதை ஊக்கப்படுத்தும் நோக்கில் வருடாந்தம் வழங்கப்படும் 02 மாதச்சம்பள ஊக்கக்கொடுப்பனவுக்கு மேலதிகமாக, அந்தந்த வங்கிகள் ஈட்டும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களுக்கு ஊக்கக்கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி அமைச்சின் அங்கீகாரத்துடன் வங்கி நிர்வாகம் வங்கித் தொழிற்சங்கத்துடன் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
2001ஆம் ஆண்டிலிருந்து இந்த ஊக்கக்கொடுப்பனவுகளின் அளவைத் தீர்மானிக்கும் பொறுப்பு வங்கிகளின் பணிப்பாளர் சபைகள் வசம் இருந்து வருகிறது.
இங்கு மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி பணிப்பாளர் சபைகளுக்கு ஊழியர்களுக்கான ஊக்கக் கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி அமைச்சின் அனுமதி அவசியம் இல்லாதபோது இலங்கை வங்கி சட்டத்துக்கமைய அதன் பணிப்பாளர் சபையின் முன்மொழிவு அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்கப்படுதல் வேண்டும்.
“2024ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய இலாபமாக மக்கள் வங்கி 41 பில்லியன் ரூபாவையும் தேசிய சேமிப்பு வங்கி 26.4 பில்லியன் ரூபாவையும் இலங்கை வங்கி 106 பில்லியன் ரூபாவையும் ஈட்டியுள்ளன. இந் நிலைமையில் கீழ் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி பணிப்பாளர் சபைகள் ஊழியர்களுக்கு மூன்று மாத ஊக்கக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்தன. அந்த இரண்டு வங்கிகளுடனும் தொடர்புடைய சட்டபூர்வமான தன்மையைப் பொறுத்தவரை இந்த ஊக்கக்கொடுப்பனவை வழங்க நிதியமைச்சின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. எனினும், இலங்கை வங்கியின் சாதனை இலாபத்தின் அடிப்படையில் பணிப்பாளர் சபை ஊக்கக்கொடுப்பனவாக 6 மாத சம்பளத்தை முன்மொழிந்திருந்தாலும் சட்டரீதியான நிலைமை காரணமாக அமைச்சின் அனுமதி கோரப்பட்டது. இதன்போது முதலில் ஆறு மாத சம்பளத்தை ஐந்து மாதங்களாகக் குறைப்பதாகக் கூறியிருந்தாலும் அந்த ஐந்து மாதக் கொடுப்பனவில் வங்கி வழங்கும் இரண்டு மாத போனஸ் கொடுப்பனவும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதன்படி இலங்கை வங்கி ஊழியர்களுக்கும் ஊக்கக்கொடுப்பனவாக கையில் கிடைப்பது 3 மாத சம்பளத்தொகை மாத்திரமே.” என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் அனுப நந்துல குறிப்பிட்டார்.
வாக்குத் தவறிய நிதியமைச்சு
நிதியமைச்சராகக் கடமையாற்றும் ஜனாதிபதியின் நேரடியான தலையீட்டினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய தமது 6 மாத ஊக்கக் கொடுப்பனவுக்கான கோரிக்கையை 5 மாதங்கள் வரை குறைப்பதற்கு இணங்கியுள்ள சூழ்நிலையில் அமைச்சின் அனுமதியைப் பெறுவதில் நிகழ்ந்துள்ள 'வாக்கு தவறுதல்' காரணமாக இந்த சிக்கல் எழுந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
“நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சங்கத்துக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று 5 மாத சம்பளத் தொகையை ஊக்கக்கொடுப்பனவாகப் பெறுவதற்கு சங்கம் இணங்கிa பின்னரும் அமைச்சு மேற்கூறிய மாற்றத்துடன் முன்மொழிவை அனுமதிக்காக அனுப்பியதே இந்நிலையை மிகவும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.”
அதன்படி, இலாபத்தின் அடிப்படையிலான ஊக்கக்கொடுப்பனவை 6 மாதங்களிலிருந்து 5 மாதங்கள் வரை குறைப்பதற்கு ஊழியர்கள் ஜனாதிபதியுடன் உடன்பட்டிருந்த நிலையில், முன்னர் கூறப்பட்ட பொதுவான வருடாந்த போனஸ் கொடுப்பனவுடன் தொடர்புடைய இரண்டு மாதங்களையும் இந்த 5 மாதங்களுக்குள் உள்ளடக்கி கணக்கிட்டு ஜனாதிபதியின் அனுமதியைப் பெற்றதன் மூலம் 100 பில்லியனுக்கும் மேற்பட்ட இலாபத்தை ஈட்டிய இலங்கை வங்கியின் ஊழியர்களது ஊக்கக்கொடுப்பனவு 3 மாத சம்பளம் வரை குறைப்பதற்கு அமைச்சு முனைந்துள்ளது.
“இதனால் தொழிற்சங்க வேறுபாடுகளைப் புறக்கணித்து இலங்கை வங்கியின் அனைத்து ஊழியர்களும் இல்லாமலாக்கப்பட்ட இந்த ஊக்கக் கொடுப்பனவை பெறுவதற்கு அரசுக்கு சார்பான சங்கத்தினதும் பங்கேற்புடன் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளன. இது தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டமொன்றை இந்த வாரம் நடத்தவுள்ளோம்” என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் அனுப நந்துல குறிப்பிட்டார்.
போராட்டத்தின் மத்தியில் மூன்றில் ஒன்று
மே 29ஆம் திகதி இலங்கை வங்கி ஊழியர்கள் அரைநாள் வேலை நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தும் வேளையில் இல்லாமலாக்கப்பட்ட 3 சம்பளத்திற்கான ஊக்கக்கொடுப்பனவில் ஒரு சம்பளத்தை வழங்குவதற்கு இலங்கை வங்கி முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி அடிப்படை போனஸ் கொடுப்பனவான இரண்டு மாத சம்பளத்துக்கு மேலதிகமாக இதுவரை ஊக்கக்கொடுப்பனவாக 4 மாத சம்பளத்தை வழங்க தற்போதைக்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், வாக்களிக்கப்பட்ட ஊக்கக்கொடுப்பனவை வென்றெடுப்பதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை வேலை நிறுத்தமாக முன்கொண்டு செல்வதற்கு இலங்கை வங்கி ஊழியர்கள் தயாராக உள்ளதாகவும், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட நிதியமைச்சு நடவடிக்கை எடுக்காதவிடத்து நாளைய தினம் (ஜூன் 6) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு தமது தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிர்ப்படுத்த தேசத்தின் வங்கியாளர் என அழைக்கப்படும் இலங்கை வங்கியின் ஊழியர்கள் தயாராக உள்ளதாக தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.