அமைதிக்கான நோபல் பரிசு வேண்டாம்! ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா சரமாரி தாக்குதல்!
“ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அவ்வாறு அவர்கள் நினைத்திருந்தால் அதற்கான தக்கபதிலடி கொடுக்கப்படும்; அது பயங்கரமாக இருக்கும்”

இஸ்ரேல் - ஈரான் போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனை தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிபடுத்தியுள்ளார். மொத்தம் மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்றிய டிரம்ப், ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹானில் ஆகிய இடங்களில் உள்ள ஈரானின் அணு ஆற்றல் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். ஈரான் உடனடியாக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்றால், கடுமையான தாக்குதல்களை சந்திக்க நேரிடும் என்றும் அந்த சந்திப்பில் எச்சரிக்கை விடுத்தார்.
குறிவைக்கப்படும் ஈரான்
மேலும், இன்னும் நிறைய இலக்குகளை அமெரிக்கா குறிவைத்துள்ளதாக தெரிவித்த டிரம்ப், அமைதி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், இன்னும் எட்டு நாள்களில் மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்கும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, தாங்கள் இலக்கு வைத்த மூன்று அணுசக்தித் தளங்களும் தகர்க்கப்பட்டுவிட்டன என்பதை உறுதிபடுத்தினார்.
மறுபுறம், தன் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் டிரம்ப், “ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அவ்வாறு அவர்கள் நினைத்திருந்தால், அதற்கான தக்கபதிலடி கொடுக்கப்படும்; அது பயங்கரமாக இருக்கும்” என்று ஈரானை அச்சுறுத்தியுள்ளார்.
சமீபத்தில், ஜி7 உச்சி மாநாட்டு கனடாவில் நடைபெற்றது. அதில் அங்கம் வகிக்கும் கனடா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் ஈரானுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

பணியாத ஈரான்
இந்த சூழலில், ஈரானின் தலைவர் அயதுல்லா காமேனியை சரணடையும் படி டிரம்ப் கூறியிருந்தார். அப்படி செய்தால் உயிர் பிழைக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு, அமெரிக்காவின் கனவு பலிக்காது எனவும், அந்நாடு பேரழிவை சந்திக்கப் போகிறது என்றும் அயதுல்லா எழுச்சியுடன் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் தான், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள ஈரான் அரசு, தாக்குதல் நடக்கும் முன்னரே தங்கள் குழுவினர் அந்த இடங்களை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் தங்களுக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என ஈரான் அரசு தொலைக்காட்சியின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில், முக்கிய இலக்காக கருதப்பட்டது ஃபோர்டோவில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் தளம் தான். தலைநகர் தெஹ்ரானில் இருந்து 96 தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் இந்த அணு ஆற்றல் தளம், நிலத்தடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை தாக்க அமெரிக்காவின் உதவியை இஸ்ரேல் நாடியிருந்தது.
இதற்கு முக்கிய காரணம், நிலத்தடி கட்டுமானங்கள், சுரங்கப்பாதைகளை தகர்க்கும் பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இதனை வீச, B-2 ரக குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.