காலநிலை மாற்ற திட்டங்களின் மீது சந்தேகம்! பசுமை ஆற்றலை அதிகரிப்பதற்கான முயற்சி ஒரு 'மோசடி'! - டிரம்ப்.
.

புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களின் மீது சந்தேகம் கொண்டவர் மற்றும் பசுமை ஆற்றலை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஒரு 'மோசடி' என்று விவரித்தவர் என்பதும் பலரும் அறிந்ததே.
காலநிலை மாற்றம் தொடர்பான '2015 பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து' அவர் மீண்டும் அமெரிக்காவை விலக்க வாய்ப்புள்ளது. டிரம்பின் முதல் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அதிபர் ஜோ பைடன் 2021இல் மாற்றியமைத்தார்.
எண்ணெய்க்காக, இன்னும் அதிகமாக துளையிடப் போகிறோம் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார். இது எரிசக்தி மலிவாக கிடைக்க வழிவகுக்கும் என உறுதியளித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக பிரசாரத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் 'அற்பமான வழக்குகளை' நிறுத்தப் போவதாக டிரம்ப் கூறினார்.
காற்றாலை மின்சாரத்திற்கான மானியங்களை நிறுத்துவதாகவும், எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி உற்பத்தியாளர்கள் மீதான வரிகளைக் குறைப்பதாகவும், பைடன் கொண்டு வந்த வாகன உமிழ்வு விதிமுறைகளை திரும்பப் பெறுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
காலநிலை வல்லுநர்கள், டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தை உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளுக்கு ஒரு பலத்த அடியாக கருதுகிறார்கள். அதே வேளையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது என்பது, இப்போதும் அமெரிக்க மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.