பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனத்தினையும் அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்
மரக்குற்றிகள் துண்டங்களாக போடப்பட்டு அதன்மேல் தண்ணீர் போத்தல்கள், ஊதுபத்தி ,வெற்று பெட்டிகளை கொண்டு மறைத்து வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட து

சூட்சுமமான முறையில்இடம்பெற்ற மரகடத்தல் முயற்சி முறியடிப்பு.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாகனம் ஒன்றிற்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனத்தினையும் அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இருந்து ஹெண்டர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.B .R..ஹேரத் தலைமையிலான பொலிஸாரால் கடத்தல் முறியடிக்கப்பட்டிருந்தது.
வள்ளிபுனம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற குறித்த ஹெண்டர் ரக வாகனம் தேராவில் வன இலாகாவிற்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது இன்று (19.05.2024) அதிகாலை வழிமறித்து சோதனை செய்த போது ஹெண்டர் ரக வாகனத்திற்குள் பாலை மரக்குற்றிகள் துண்டங்களாக போடப்பட்டு அதன்மேல் தண்ணீர் போத்தல்கள், ஊதுபத்தி ,வெற்று பெட்டிகளை கொண்டு மறைத்து
வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லமுற்பட்ட போது இவை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல இலட்சம் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் துண்டங்களாக அறுக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்டவேளை சாரதியினையும் வாகனத்தினையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
மரக்கடத்தல் இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான (60910) ஜெயசிங்க, (70537) குணவர்த்தன மற்றும் பொலிஸ் கொஸ்தாபல்களான (88509) பிரதீபன்,(72485) ஜெயசூரிய ,(56476) ரணசிங்க, (99802) ரத்நாயக்க, (105211) கலகெதர ஆகிய குறித்த பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
ரெட்பானா விசுவமடு பகுதியை சேர்ந்த வாகன சாரதியை இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட பாலைமரக்குற்றிகள் மற்றும் ஹெண்டர் ரக வாகனத்தையும் 46 வயதுடைய சந்தேக நபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக மரக்கடத்தல் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் இது தொடர்பில் அண்மையில் வடமாகாண பொலிஸ் உயரதிகாரி அவர்களுக்கு ஊடாக கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதுக்குடியிருப்பு பகுதியில் முல்லைத்தீவு பொலிஸ் அணியினரால் பல நூற்றுக்கணக்கான முதிரைக் குற்றிகள் கைப்பற்றப்பட்டிருந்த பின்னணியில் இந்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு பாரிய சிக்கலாக மாறிய நிலைமையில் இன்றைய தினம் இந்த மரங்கள் புதுக்குடியிருப்பு பொலிசாரால் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ச்சியாக புதுக்குடியிருப்பு பொலிசார் மரக்கடத்தல் காரர்களுக்கு ஒத்துழைக்காமல் இவ்வாறு தொடர்ச்சியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்