Breaking News
வட்டுக்கோட்டை முதல் மீதெனியா வரை நாட்டில் சட்டம் ஒழுங்கு பலவீனமானதாக உள்ளது ! பொலிஸாரின் அசமந்தப் போக்கு !
.

வட்டுக்கோட்டை முதல் மீதெனியா வரை நாட்டில் சட்டம் ஒழுங்கு பலவீனமானதாக உள்ளது ! பொலிஸாரின் அசமந்தப் போக்கு !
வட்டுக்கோட்டையில் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சாதிய அடிபாடுகள், கொள்ளைகள், போதைப் பொருள், கொலைகள், சாதிய வெறியாட்டங்கள் தொடர்பில் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. பொலிஸார் கைது செய்வதும் விடுவிப்பதும் குற்றவாளிகள் பொலிஸ் நிலையம் சென்று வருவது அவர்கள் மாமியார் வீட்டுக்கு சென்று வருவதாகவே உள்ளது. இதனால் வட்டுக்கோட்டை மக்கள் இந்தக் குருவிக் கும்பல் தொடர்பில் அச்சமடைந்துள்ளனர்.
இவர்கள் தங்களை அப்பிரதேசங்களில் உள்ள ஆலயங்களும் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவர்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மதுவும் கும்மாளமுமாக ஆலயச்சுற்றாடலில் மேற்கொள்ளப்படுகின்றது. பொலிஸாருக்கும் இக்குற்றவாளிகள் யார் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். ஆனாலும் பொலிஸார் குற்றவாளிகளோடு சேர்;ந்து இயங்குகின்றார்கள் என்ற காரணத்தினால் வட்டுக்கோட்டை மக்கள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயங்குகின்றனர்.
அதேபோல் மீதெனிய பொலிஸ் பிரிவில் பெப்ரவரி 19இல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் வட்டுக்கோட்டை, மீதெனியாவைத் தாண்டி நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றது. அடிபாடுகள், குழு மோதல்கள், கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போதைவஸ்து கடத்தல் என கிரிமினல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் கிரிமினல் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்கான தண்டனை வழங்கப்படாமல் அவர்கள் தப்பிக்க வைக்கப்படுகின்றனர்.
நாடறிந்த மிக மோசமான பாடசாலை மாணவி வித்தியா மீதான மிகக் கொடுமையான மிருகத்தனமான பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாலியல் வெறிகொண்ட தமிழ் ஆண்கள். சுவிஸ் குமார் உட்பட்ட இந்த மோசமான குற்றவாளிகள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது தமிழ் பொலிஸ் அதிகாரியான சிறிகஜன் மற்றுமொரு சிங்கள பொலிஸ் அதிகாரி இருவருமாக சுவிஸ் குமாரைத் தப்ப வைத்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் பொலிஸ் அதிகாரியான சிறிகஜன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அததைவிட பொலிஸார் மதுபோதையில் கிடப்பதும், கிரிமினல் சக்திகளோடு கூட்டு வைத்திருப்பதும், போதைவஸ்து கடத்தல்களில் அவர்களே ஈடுபடுவதும் பரவலாக நாடு பூராவும் நடைபெறுகின்றது. இதனால் தான் நாட்டில் சட்ட ஒழுங்கு மீறல்கள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றது.
நீண்ட காலத்தில் இப்பிரச்சினையைத் தீர்பதாக இருந்தால் வேலியே பயிரை மேய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் வடக்கு கிழக்கில் இருந்து கொழும்பு பாதாளக் குழுக்களைச் சென்றடைகின்றது. இராணுவ ஆயுதக் கிடங்கில் காணாமல் போகும் ஆயதங்களும் பாதாளக் குழுக்களைச் சென்றடைகின்றது. கொழும்பில், மன்னாரில் அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தில் இருந்தவர்கள். நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள அனைத்து இன, மத குழுக்களைச் சேர்ந்த கிரிமினல்களும் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுலதற்கில்லை. வட்டுக்கோட்டை குருவிக் கும்பல் கொழும்பில் ஒரு கொலையைச் செய்துவிட்டு சங்கரத்தை பத்திராளி கோயிலில் ஒழிந்துகொள்ளும் ஒரு காலம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து வட கடலுக்கு இந்திய மீனவர்கள் போதைப் பொருளைக் கடத்துகின்றனர். வடக்கு போதைப்பொருள் வர்த்தகத்தின் மையமாக மாறி வருகின்றது.
இவையெல்லாம் தற்போது நாட்டில் பெரும் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. அரச நாட்டின் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நாடு முழமையுமான நடவடிக்கையில் இறங்க வேண்டும். யாழ் இளைஞர்கள் கண்டி வரை சென்று களவுகளில் ஈடுபடுகின்றனர். கொழும்பிலிருந்து வந்து கோப்பாயில் களவெடுக்கின்றனர். இது போதைப்பொருள் கடத்தல், கொலைகளுக்கும் இட்டுச் செல்கின்றது. கொலையில் ஈடுபட்ட இளைஞர்கள் வட்டக்கட்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பிரிவுகள் மத்தியில் தகவல் பரிமாற்றம் மிக இன்றியமையாதது. மத்தியத்துவப்படுத்தப்பட்ட டிஜிற்றல் இன்ரலிஜென்ஸ் பரவர்த்தனை மையம் அவசியம்.
அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணங்களுக்கான இவ்வாறான மையங்கள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டும்.
அத்தோடு வன்முறையாளர்கள் வன்முறைத் தாக்குதலை கண்மூடித்தனமாக நடத்திவிட்டு பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி சமாதானமாகப் போகக் கோருகின்றனர் என சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த். வட்டுக்கோட்டையில் சாதிய வெறித் தாக்குதலை நடத்தியவர்கள், குழு வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திவிட்டு பின் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரில் முறைப்பாடு செய்யவிடாமல் தடுக்கின்றனர். சமாதானமாக வரும்படி வற்புறுத்துகின்றனர். இவ்வாறான அழுத்தங்கள் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இது காணப்படுகின்றது.
கிரிமினல் குற்றமென்பது தனிநர்களுக்கு எhதிரானதானாலும் அது அரசுக்கும் எதிரானது. அந்நாட்டின் பிரஜைக்கு எதிரானது. தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தால் அத்தாக்குதலின் அடிப்படையில் பொலிஸார் பாதிக்கப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமலேயே மூன்றாம் தரப்பின் தகவல் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின் தன்னை நிரபராதியாக்க வேண்டிய பொறுப்பு குற்றசம்சாட்டப்பட்டவருடையதாக வேண்டும். அவ்வாறான வகையில் நீதித்துறை மறுசீரமைக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள் விடயத்தில் தன்னை நிரபராதியாக்க வேண்டிய பொறுப்பு குற்றம்சாட்டப்பட்டவருக்குரியதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு கொண்டு வரும்பட்சத்திலேயே யோகேஸ்வரி முத்தையா மற்றும் தர்மிகா கேதீஸ்வரன் ஆகிய சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு நியாயம் கிடைக்கும்.
மேலும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குவது மட்டுமல்ல அதற்கு ஏற்பட்ட செலவையும் அவர்களே செலுத்துகின்ற வகையில் தண்டனைகள் வடிவமைக்கப்பட வேண்டும். சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சமூக சேவைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அவர்களது நன்னடத்தைச் சான்றிதழ் வரும்வரை அவர்கள் கட்டான வேலைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கும் வகையிலான சட்ட சீர்திருத்தங்களை சட்டவாக்காளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கவேண்டும்.
மேலும் பொது மக்கள் அனாமதேயமாக தகவல்களை வழங்குவதற்கான வாய்ப்பினை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முழுமுயற்சி எடுக்க வேண்டும்.
தேசம் அருள்மொழிவர்மன்.