போர் பதற்றங்களுக்கு இடையில், சிரியாவில் இருந்து 75 பேரை மீட்ட இந்தியா?
.

போர் பதற்றம் காரணமாக சிரியாவில் இருக்கும் இந்தியர்களை மீட்டு, நாட்டுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், 75 பேரை சிரியாவில் இருந்து இந்திய அரசு வெளியேற்றி உள்ளது. விரைவில் இவர்கள் நாடு திரும்புவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) அரசை முடக்கிய கிளர்ச்சியாளர்கள், தலைநகர் டமாஸ்கஸை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், மக்களின் பாதுகாப்பில் பிரச்னை எழுந்ததை உணர்ந்த இந்திய அரசு, அவர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வாயிலாக டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் இருக்கும் இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொண்டது.
நள்ளிரவில் வெளியான அறிக்கை
இந்த சூழலில் நேற்று நள்ளிரவு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "உள்நாட்டில் போர் பதற்றம் காரணமாக இந்தியர்கள் 75 பேர் சிரியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஒருவர் ஜம்மு & காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான சைரீன் என்பவராவர். இவர் சைதா சைனப் இடத்தில் இருந்து மீட்கப்பட்டார். தற்போது மீட்கப்பட்ட 75 பேரும் பத்திரமாக லெபனன் எல்லையைத் தாண்டிவிட்டனர். விரைவில் விமானங்கள் வாயிலாக டெல்லி அழைத்து வரப்படுவர்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய அரசு வெளிநாட்டில் இருக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ளது என குறிப்பிட்டிருக்கும் வெளியுறவுத் துறை, வேறு யாரேனும் சிரியாவில் சிக்கியிருந்தால் உடனே அரசிடம் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. சிரியாவில் அரசு மற்றும் கிளர்ச்சிப் படைகளுக்கு இடையே நடந்த போரில், மேற்கூறப்பட்ட சைதா சைனப் இடத்தில் இருந்து பல மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவ, டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்தின் அலுவலர்கள் தயார் நிலையில் இருப்பதாக அரசு மக்களிடத்தில் நம்பிக்கை விதைத்துள்ளது. அங்கிருப்பவர்கள் எளிதாக தொடர்பு கொள்ள (+963 993385973) உதவி எண்ணையும் வெளியுறவுத் துறை பகிர்ந்துள்ளது.
இந்த உதவி எண்ணை மொபைலில் பதிவுசெய்து வாட்ஸ்ஆப் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னஞ்சல் முகவரியை (hoc.damascus@mea.gov.in) வெளியுறவுத் துறை பகிர்ந்துள்ளது. தகர்ந்த 50 ஆண்டுகால சாம்ராஜ்யம்
கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் சிரியா அரசை வீழ்த்தியது. டமாஸ்கஸை அடைந்த கிளர்ச்சியாளர்கள், அதனை தற்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) இந்த சம்பவத்திற்கு அரங்கேறியது. கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை நெருங்கி வருவதை அறிந்த அதிபர், நாட்டை விட்டு தப்பி ஓடி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக செய்திகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அரசு அதிகாரத்தின் முக்கிய பதவியில் இருந்த அனைவரும் நாட்டை விட்டு வெளியேறிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், 50 ஆண்டுகால அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக 14 ஆண்டுகால அசாதின் ஆட்சி, வெறும் 11 நாட்களில் தகர்க்கப்பட்டது. இவர் தலைமையின் கீழ் 14 ஆண்டுகள் இயங்கிய சிரியா, போர் பதற்றங்கள், அரசியல் நெருக்கடிகள் போன்ற பல பிரச்னைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.