அமைச்சர் வசந்த சமரசிங்க, அவர்களுக்கும் யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல்!
களஞ்சிய வசதிக்கான தேவை உள்ளமையால் நாவற்குழி அரச களஞ்சியசாலையை பயன்படுத்த வர்த்தக சங்கத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, அவர்களுக்கும் யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்கேற்புடன் நேற்றைய தினம் (30) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கருத்துரைத்த
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, அவர்கள் தற்போது வருடத்திற்கு இருநூற்று நாற்பதாயிரம் மெற்றிக்தொன் கீரிச்சம்பா அரிசி தேவைப்பாடு உள்ளதாகவும் ஆனால் நாட்டில் 160ஆயிரம் மெற்றிக்தொன் கீரிச்சம்பா அரிசி மட்டுமே உற்பத்தி நடைபெறுவதாகவும் இந்நிலையிலேயே சம்பா அரிசி விலை அதிகரித்து செல்வதாக தெரிவித்தார்.
மேலும் குறுங்கால தேவையை நிறைவுசெய்யும் வகையில் கீரிச்சம்பா அரிசியை இறக்குமதி செய்து சதோஷ விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கவும் தொடர்ந்து அதன் உற்பத்தி அளவை அதிகரிப்பது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி நாட்டிற்கு திரும்பியவுடன் நாற்பதாயிரம் மெற்றிக் தொன் கீரிச்சம்பா அரிசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.
பொலன்நறுவையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கீரிச்சம்பா அரிசியை அங்கீகரிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்யவும் கௌரவ அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
நெல்விளைச்சல் அதிகமாக உள்ள பொலன்நறுவை அநுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அரிசி ஆலைகள் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக பிறவுன் சீனி ,அரிசி உள்ளிட்ட 23 வகையான பொருட்களை விநியோகம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் வர்த்தக சங்க உரிமையாளர்கள் களஞ்சியவசதி மற்றும் 350மெற்றிக் தொன் -500மெற்றிக் தொன் வரையான பொருட்களை துறைமுகம் ஊடாக கொண்டு வருவதற்கான அனுமதி கோரிய நிலையில் அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன்,
சட்ட விரோத பொருட்களை சட்டரீதியற்ற முறையூடாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் . தற்போது துறைமுகம் ஊடாக பயணிகள் போக்குவரத்து மட்டுமே நடைபெறுவதாகவும், 350மெற்றிக் தொன் -500மெற்றிக் தொன் வரையான ஆடை வகை, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் அவர்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மேலும் களஞ்சிய வசதிக்கான தேவை உள்ளமையால் நாவற்குழி அரச களஞ்சியசாலையை பயன்படுத்த வர்த்தக சங்கத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் நாவற்குழி களஞ்சியசாலையில் திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கு கௌரவ வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் நாவற்குழி களஞ்சியசாலையில் மூன்று பிரிவுகள் காணப்படுவதாகவும் அதில் ஒரு பிரிவு மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றையது உணவுத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலக பிரத்தியேக உதவியாளர் எஸ்.கபிலன் மற்றும் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


