ஈக்வடாரின் எல் ஓரோ மச்சாலா சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 கைதிகள், நான்கு சிறை ஊழியர்கள் பலி ! 33 கைதிகள் காயம் !!
நிலைமை மோசமடைந்ததை அடுத்து சிறப்பு பொலிஸ் குழு சிறைக்குள் நுழைந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.
ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலா சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு சிறை ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 33 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
சிறை அதிகாரிகளின் தகவலின்படி, சில கைதிகள் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மச்சாலா சிறையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள புதிய உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்றும் அரசுத் திட்டத்தை எதிர்த்து கைதிகள் எழுச்சி தொடங்கியதாக ஆரம்பக் கணக்குகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்தபோது சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கி பிரயோகங்கள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்குரல்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து சிறப்பு பொலிஸ் குழு சிறைக்குள் நுழைந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இது சிறைச்சாலைக்குள் உள்ள இரண்டு கும்பல்களுக்கு இடையேயான மோதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இதே மச்சாலா சிறையில் நடைபெற்ற ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகள் மற்றும் ஒரு சிறைக் காவலர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


