'இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பு!
,

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும். 2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிப்பதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடன் புதன்கிழமை (30) சந்தித்த பின்னரே கலாநிதி ஹஷ்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
'இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரி சலுகை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாம் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
நான் இருமுறை சரிபார்த்தேன். அதிகரிப்பு கோர எந்த ஒதுக்கீடும் இல்லை. எனவே நாம் செய்ய வேண்டியது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.' என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்புவதை வரையறுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார். நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற நிலையில், அமைச்சரவை பேச்சாளரின் இந்த கூற்று எதனை வெளிப்படுத்துகிறது? நாம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.